
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக் காஷ்மீர் மீது இந்தியா தாக்குதல் நடத்திய பிறகு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு உச்சக்கட்டப் பதற்றத்தை எட்டியுள்ளது. இந்தியாவின் ராணுவ நடவடிக்கைக்கு உலகின் பல நாடுகள் எதிர்வினையாற்றியுள்ளன. அதில் நமது மற்றொரு அண்டை நாடான சீனாவின் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.இந்தியா நடத்திய வான்வழித் தாக்குதல்கள் ‘வருந்தத்தக்கவை’ என்று சீன வெளியுறவு அமைச்சகம் கவலை தெரிவித்துள்ளது. இப்போதைய நிலைமை சீனாவுக்குக் ‘கவலை’ தருவதாக சீன வெளியுறவு அமைச்சகச் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
“இந்தியாவும் பாகிஸ்தானும் அண்டை நாடுகள், இந்த நிலை எப்போதுமே தொடரும். அவை இரண்டும் ஒன்றுக்கொன்று அண்டை நாடுகள் என்பதுடன், இரண்டுமே சீனாவின் அண்டை நாடுகளும் ஆகும். பயங்கரவாதம் எந்த வகையில் இருந்தாலும் அதைச் சீனா எதிர்க்கிறது” என்று சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.இரு அண்டை நாடுகளும் “அமைதியைப் பேணவும், நிதானத்தைக் கடைப்பிடிக்கவும், நிலைமையை மேலும் சிக்கலாக்கும் செயல்களைத் தவிர்க்கவும்” வேண்டுமெனச் சீனாவின் வெளியுறவு அமைச்சகச் செய்தித் தொடர்பாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தெற்காசியாவில் பதற்றம் அதிகரித்தால் சீனாவின் முதலீடு மற்றும் அதன் நீண்டகாலக் கனவுத் திட்டங்களில் நேரடித் தாக்கம் ஏற்படும் என்பதால், தனது நலன்களைப் பாதிக்கும் எதுவும் நடைபெறச் சீனா விரும்பாது என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.சீனா, பாகிஸ்தான் இடையிலான அரசியல் உறவுகள் 1951 மே 21 அன்று தொடங்கின. பாகிஸ்தானும் சீனாவும் பல பத்தாண்டுகளாகப் பாதுகாப்பு ஒத்துழைப்பையும் அரசியல் உறவுகளையும் கொண்டுள்ளன. இந்தக் காலக்கட்டத்தில், சீனாவைப் பொருளாதார ரீதியாகச் சார்ந்திருக்கும் தன்மையும் பாகிஸ்தானில் அதிகரித்துள்ளது.
“தனது சொந்த நலன்களில் அதிக நாட்டம் கொண்டுள்ள சீனா, எந்தவொரு சர்ச்சையிலும் சிக்க விரும்புவதில்லை. இந்தியாவுக்கு எதிரான எந்தவொரு போரிலும் பாகிஸ்தானை நேரடியாகச் சீனா ஆதரிக்காததற்கு இது ஒரு காரணம் ஆகும்.”இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் உள்ள ஜின்ஜியாங் மாகாணத்தில் வளர்ச்சியை முடுக்கிவிட்டுப் பிராந்தியத்தை மேம்படுத்தச் சீனா விரும்புகிறது. ‘சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம்’ மற்றும் பெல்ட் அண்ட் ரோடு திட்டமும் பாகிஸ்தானில் வெற்றி பெற்றால்தான், ஜின்ஜியாங் மாகாணத்தின் வளர்ச்சி சாத்தியமாகும். இந்தத் திட்டத்திற்கு இந்தியா ஏற்கெனவே எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையில், சிக்கலை மேலும் அதிகரிக்கச் சீனா விரும்பாது.
கடந்த ஆண்டில் சீனா, சுமார் 560 கோடி அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான மின்னணு இயந்திரங்கள் மற்றும் கருவிகளைப் பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்தது. இவற்றில், 35 விழுக்காடு செமிகண்டக்டர் சாதனங்கள் மற்றும் 27 விழுக்காடு ஸ்மார்ட்போன்கள்.சீனா பாகிஸ்தானுக்கு 240 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள அணு உலைகள், பாய்லர்கள், இயந்திரங்கள் மற்றும் இயந்திரங்களுக்கான உதிரிப் பாகங்களை ஏற்றுமதி செய்தது. அதுமட்டுமல்ல, 130 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள இரும்பு மற்றும் உருக்குப் பொருட்களும் ஏற்றுமதி செய்யப்பட்டன.
“பாகிஸ்தானில் வசிக்கும் சீன குடிமக்களுக்கு ஏற்கெனவே பாதுகாப்பு நெருக்கடி இருக்கும் நிலையில், தற்போது இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றங்கள் அதிகரித்தால், சீனாவின் அனைத்துத் திட்டங்களும் பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
அமெரிக்காவுடனான சிக்கல்கள் அதிகரிக்கத் தொடங்கியதும், பாகிஸ்தான் சீனாவை நோக்கித் திரும்பத் தொடங்கியுள்ளது. சீனாவும் பாகிஸ்தானும் கூட்டு ராணுவப் பயிற்சிகளை மேற்கொண்டன. அத்துடன், சீனாவிடம் இருந்து நவீன ஆயுதங்களையும் பாகிஸ்தான் பெருமளவில் வாங்கத் தொடங்கிவிட்டது.
அண்டை நாடுகளுடன் நிதானமாகவும் சுமூகமாகவும் நடந்து கொள்வதையே சீனா விரும்புகிறது. அதிலும், அமெரிக்கா உடனான வணிகப் போர் என்ற சிக்கல் முளைத்துள்ள நிலையில், சீனாவின் நிர்ப்பந்தங்கள் அதிகரித்துவிட்டன. எனவே இந்தியாவுடன் மோதல் போக்கை மேற்கொள்ள அந்நாடு விரும்பாது.இந்தியா, சீனாவின் மிகப்பெரிய வணிகக் கூட்டாளியாக இருப்பதால், இந்தியாவுடன் வலுவான உறவுகளைப் பேணவே அந்நாடு விரும்புகிறது.தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையில் இஸ்ரேலைப் போலவே இந்தியாவும் சர்வதேச நாடுகளின் ஆதரவை விரும்புகிறது.
