
மனைவியுடனான கள்ளக்காதலை கண்டித்ததால் செல்வம் என்பவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் சேலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது…
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே வீரகனூர் ரெட்டியா தெருவைச் சேர்ந்தவர் வினாயகம் மகன் செல்வம்(55). இவருக்குத் திருமணமாகி சத்தியா என்ற மனைவியும் திலீப், பாபு ஆகிய இரண்டு மகன்களும் உள்ளனர். இந்நிலையில் செல்வம் மினி லாரியில் வைக்கோல் ஏற்றி வந்து விற்பனை செய்து வருகிறார். வீரகனூர் இராயர் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜலிங்கம் மகன் செல்வராஜ் (58). இவர் வீரகனூர் பேருந்து நிலையத்தில் பேன்சி ஸ்டோர் டெய்லரிங் கடை வைத்து நடத்தி வருகிறார்.
இந்நிலையில் செல்வத்தின் மனைவி சத்தியா (46) செல்வராஜின் பேன்சி ஸ்டோரில் வேலை செய்து வந்துள்ளார். இதனால் செல்வராஜிக்கும் சத்யாவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பழக்கம் நாளடைவில் இருவருக்கும் கள்ளகாதலாக மாறியுள்ளது. இந்த விவகாரத்தை அறிந்த செல்வராஜின் மனைவி தாரா கண்டித்துள்ளார். அதனால், ஆத்திரமடைந்த செல்வராஜ் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தாலி கட்டிய மனைவி என்று கூடப் பாராமல் தாராவை கொலை செய்துள்ளார்.

கொலை செய்த குற்றத்திற்காகச் சிறையிலிருந்து தற்போது ஜாமினில் வெளியே வந்த செல்வராஜியிடம் எனது மனைவி சத்யாவுடன் பேசக் கூடாது எனச் செல்வம் கண்டித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த செல்வராஜ் செல்வத்தைக் கொலை செய்யத் திட்டம் தீட்டியுள்ளார்.
இந்நிலையில் நேற்று வீரகனூர் பேருந்து நிலையம் பேன்சி ஸ்டோர் முன்பு நின்றுகொண்டிருந்த செல்வத்தைச் செல்வராஜ் மறைத்து வைத்திருந்த வீச்சரிவாளால் தலையில் பலமாகத் தாக்கிப் பின்னர் சரமாரியாக வெட்டியுள்ளார். இரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார். நீண்ட நேரம் உயிருக்குப் போராடி மருத்துவ உதவி கிடைக்காமல் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாகப் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் செல்வம் உடலைக் கைப்பற்றி உடலைப் பிரேத பரிசோதனைக்காகச் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலையாளி செல்வராஜ் வீச்சருவாளுடன் வீரகனூர் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

