
கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய், ‘வாகை சூடும் வரலாறு திரும்புகிறது; உங்க விஜய் நான் வரேன்’ எனும் பிரச்சாரத்தை மேற்கொண்டார். இந்தப் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி மொத்தம் 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்நிலையில் , அந்த பிரச்சாரக் கூட்ட நெரிசல் பலி குறித்து கரூர் காவல்துறை, என். ஆனந்த், சிடிஆர் நிர்மல்குமார் மற்றும் தவெக கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன் ஆகியோர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இதனையடுத்து அவர்கள் அனைவரும் தலைமறைவாகினர்.
தலைமறைவானவர்களை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இதில், மதியழகன் மட்டும் காவல்துறையில் சிக்க, என். ஆனந்த் மற்றும் சிடிஆர் நிர்மல்குமார் ஆகிய இருவரும் தொடர்ந்து தனிப்படையிடம் சிக்காமல் தலைமறைவாகவே இருந்துவந்தனர். இதற்கிடையில், நீதிமன்றங்களில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
குறிப்பாக உச்சநீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்க வேண்டும் என மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் நேற்று இடைக்கால உத்தரவு பிறப்பித்த உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணையை ரத்து செய்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில் , நேற்று முதலில் தவெகவின் இணைப் பொதுச் செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார், கட்சியின் தலைவர் விஜயைச் சந்தித்து பேசினார். அதனைத் தொடர்ந்து வெளியேவந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், நாங்கள் துக்கத்தில் இருக்கிறோம். இன்னும் ஓரிரு நாளில் விரிவாக பேசுவோம் என்று தெரிவித்தார்.
இந்நிலையில், இன்று பட்டினப்பாக்கத்தில் உள்ள விஜய் வீட்டிற்கு என். ஆனந்த் சென்று அவரைச் சந்தித்து பேசியுள்ளார்.சிடிஆர் நிர்மல்குமார் மற்றும் என். ஆனந்த் ஆகிய இருவருடனான சந்திப்பில் உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து பேசியதாகவும், கரூர் செல்வது தொடர்பாகவும் பேசப்பட்டதாக சொல்லப்படுகிறது.


