பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு, தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தந்தை பெரியாரின் 147-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தை சமூக நீதி நாளாக, தமிழ்நாடு அரசு 2021-ல் அறிவித்திருந்தது. அவரது பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மரியாதை செலுத்தினார்.
சென்னை பனையூரில் கட்சி அலுவலகத்தில் உள்ள பெரியார் சிலைக்கு விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இது தொடர்பாக, எக்ஸ் தளத்தில் தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், பெண்கள் முன்னேற்றம், சுயமரியாதை, பகுத்தறிவுச் சிந்தனை, சமூக சீர்திருத்தக்கொள்கை, வகுப்புவாரி பிரதிநிதித்துவம் போன்ற சீர்திருத்த சிந்தனைகள் வாயிலாக, நம் மக்களுக்காக உழைத்த கொள்கைத் தலைவர் தந்தை பெரியாரின் பிறந்ததினமான இன்று, சென்னை பனையூரில் உள்ள, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை நிலையச் செயலகத்தில், அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன் என்று விஜய் தெரிவித்துள்ளார்.



