
விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம், கங்கர்செவலில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு நான்கு இலட்சம் ரூபாய் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கங்கர்செவலில் ஏற்பட்ட வெடிவிபத்தில் கௌரி என்பவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்த செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விபத்தில் காயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காளிமுத்து, ஜெயலட்சுமி, மேகலை, குமரேசன், சிவரஞ்சனி, மாரியம்மாள் ஆகியோருக்குச் சிறப்புச் சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளார்.
விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறியுள்ளதுடன், நான்கு இலட்ச ரூபாய் முதலமைச்சரின் நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார்.
பலத்த காயமடைந்தோருக்கு ஒரு இலட்சம் ரூபாயும், இலேசான காயமடைந்தவருக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் வழங்க உத்தரவிட்டுள்ளார்.



