
தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் இன்று கூடுகிறது. முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடரில் தமிழக ஆளுநர் அர்லேகர் உரை நிகழ்த்த உள்ளார். இதற்காக ஆளுநர் அர்லேகர் இன்று காலை 9.55 மணிக்கு சட்டசபைக்கு வருகிறார்.
அவரை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், சட்டசபைச் செயலாளர் சாந்தி ஆகியோர் வரவேற்கின்றனர். தொடர்ந்து, சட்டசபைக் கூட்ட அரங்குக்கு ஆளுநர் அர்லேகர் வந்ததும் 10 மணிக்கு சபை நடவடிக்கைகள் தொடங்கும். அப்போது அரசின் சார்பில் தயாரித்து அளிக்கப்பட்டுள்ள உரையை ஆளுநர் அர்லேகர் வாசிப்பார். அதன் பிறகு ஆளுநரின் உரையை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தமிழில் வாசிப்பார்.
பின்னர், கூட்டத்தொடரில் நிதி அமைச்சர் மரிய வில்சன் வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கை பேரவையில் தாக்கல் செய்யப்படும். மேலும் இந்த கூட்டத்தொடரில் புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் விஜய் வெளியிடலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அதே நேரம் தமிழகத்தில் தற்போது நடைபெறும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள், மின்வெட்டு பிரச்சினைகள், பயிர்க்கடன் தள்ளுபடி, சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப பிரதான எதிர்க்கட்சியான திமுக மற்றும் அதிமுக திட்டமிட்டுள்ளன..


