
ஈரோடு:
சேலம், தருமபுரி போன்ற மாவட்டங்களில் புதிய மஞ்சள் அறுவடை நடைபெறுவதால், ஈரோடு மஞ்சள் சந்தையில் புதிய மஞ்சளின் வரத்து அதிகரித்துள்ளது. புதிய மஞ்சளுக்கு கிடைக்கும் அதிக விலையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைகின்றனர்.
ஈரோடு மாவட்டத்தில், ஈரோடு மற்றும் பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், ஈரோடு மற்றும் கோபி கூட்டுறவு சங்கம் ஆகிய நான்கு இடங்களில் ஏலம் மூலம் மஞ்சள் விற்பனை நடைபெற்று வருகிறது. வாரத்தில் திங்கள் முதல் வெள்ளி வரை நடைபெறும் ஏலத்தில், வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த வியாபாரிகள் மஞ்சள் விற்பனை மற்றும் கொள்முதல் செய்கிறார்கள்.
அதிகபட்ச விலை:
மஞ்சள் விவசாயிகள் தங்கள் விளைவித்த மஞ்சளை, விலை உயர்வுக்கு ஏற்ப விற்பனைக்குக் கொண்டு வருவது வழக்கமாக உள்ளது. கடந்த 2011-க்கு பிறகு மஞ்சள் விலை அதிகமாக உயரவில்லை.
வியாபாரிகள் ஆர்வம்:
தற்போது ஈரோடு, சேலம், தருமபுரி போன்ற மாவட்டங்களில் புதிய மஞ்சள் அறுவடை நடைபெற்று வருகிறது. புதுமஞ்சளுக்கு குவிண்டால் ரூ.1,500 வரை கூடுதல் விலை கிடைக்கின்றதால் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.
இதுகுறித்து ஈரோடு மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் சங்க செயலாளர் சத்தியமூர்த்தி தெரிவித்ததாவது: ஈரோடு பகுதியில் பழைய மஞ்சள் குவிண்டால் ரூ.7,000 முதல் ரூ.13,500 வரை விற்பனை செய்யப்படுகிறது. புதிய மஞ்சள் குவிண்டால், ரூ.1,000 முதல் ரூ.1,500 வரை உயர்ந்து ரூ.12,500 முதல் ரூ.14,500 வரை விற்பனை ஆகிறது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியில் கடந்த 10 நாட்களுக்கு முன் அறுவடை தொடங்கியுள்ள புதிய மஞ்சள் தற்போது வருகை தருகிறது. கர்நாடகா மற்றும் தருமபுரி மாவட்டங்களில் நடந்த அறுவடை காரணமாக அங்கிருந்து ஈரோட்டுக்கு மஞ்சள் வருகை தருகிறது. புதிய மஞ்சளுக்கு அதிக தேவை இருப்பதால், விற்பனை அதிகரிக்கிறது.
ஆன்லைனில் முன்பதிவு:
நிஜாமாபாத் பகுதியில் அடுத்த வாரங்களில் முழு அளவிலான அறுவடை நடைபெறவுள்ளது. தற்போது, மகாராஷ்டிரா மாநிலம் சாங்கிலி மற்றும் மராத்வாடா பகுதிகளில் மஞ்சள் வரத்து அதிகரித்து வருகிறது. வரும் ஏப்ரல் மாதத்தில் ஆன்லைனில் கொள்முதல் செய்யும் வகையில், விவசாயிகள் ரூ. 13 ஆயிரம் முதல் ரூ. 15 ஆயிரம் வரை பதிவு செய்து வருகின்றனர். புதிய மஞ்சள் முழு அளவிலான வரத்துடன் வந்தவுடன், விலை நிலவரம் மாறும், அதுவரை சீராக உயரும்.
