
பாலஸ்தீனம் மற்றும் லெபனான் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலுக்குப் பதிலடியாகக் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு சுமார் 180 ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஈரான் ஏவியது. இந்தத் திடீர் தாக்குதலால் நிலை தடுமாறிய இஸ்ரேல் பதில் தாக்குதலுக்கு அமெரிக்காவுடன் சேர்ந்து திட்டம் தீட்டி வருகிறது. ஈரானின் எண்ணெய் வயல்களையும், அணு உலையையும் தாக்கும் திட்டமும் இஸ்ரேலிடம் உள்ளது.
ஆனால் அதனால் ஏற்படும் விளைவுகளால் அமெரிக்கா அதை ஆமோதிக்கத் தயக்கம் காட்டுகிறது. வெள்ளை மாளிகையில் நேற்றைய தினம் பேசிய அதிபர் ஜோ பைடனும் ஈரான் அணு உலையைத் தாக்குவதற்கு பதிலாக வேறு வழிகளை யோசிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். ஆனால் அமெரிக்க முன்னாள் அதிபரும் வரும் நவம்பர் 5 ஆம் தேதி நடக்கும் அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடுபவருமான டிரம்ப் மாறுபட்ட கருத்தை வலியுறுத்தியுள்ளார்.
நேற்றைய தினம் வடக்கு கரோலினா பகுதியில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்ட டிரம்ப் பேசியதாவது, ஈரானை தாக்கலாமா என்று அவரிடம் [ஜோ பைடனிடம்] கேள்வி கேட்கப்பட்டது. அவர்கள் நமது அணு சக்தியைத் தாக்காதவரையில் நாம் தாக்க வேண்டாம் என்று பைடன் கூறுகிறார்.
அவர் [பைடன்] இந்த விஷயத்தில் தவறாகப் புரிதலுடன் இருக்கிறார். நீங்கள் தாக்குதல் நடத்த வேண்டியதே அணுச் சக்தி மீதுதான். அணு ஆயுதங்கள் தானே உலகிலேயே அதிக ஆபத்துடைய ஒன்று. எனவே முதலில் அணு சக்தியைத் தாக்குங்கள், அதன்பிறகு மற்றதைப் பற்றிக் கவலைப்படுங்கள். அவர்கள் [ஈரான்] அணு ஆயுதத்தைப் பயன்படுத்தத் திட்டமிட்டிருந்தால் நிச்சயம் பயன்படுத்தியே தீர்வார்கள் என்று இஸ்ரேலுக்கு டிரம்ப் அறிவியரை வழங்கியுள்ளார்.
ஈரானில் ஒரே ஒரு அணுசக்தி நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு அணு உலை உள்ளிட்ட அணுசக்தி சார்ந்தவை இயங்கி வருகிறன. தலைநகர் தெஹ்ரானுக்கு தெற்கே 300 கிலோமீட்டர் தொலைவில் ஐஸ்பஹான் நகரில் வளைகுடா கடற்கரை அருகே அந்த அணுசக்தி நிலயமானது செயல்பட்டு வருகிறது. ரஷியாவுடன் இணைந்து கடந்த 1992 ஆம் ஆண்டு இந்த அணு உலை உருவாக்கப்பட்டது.

