
புதுடில்லி: தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், மானிய விலை தக்காளியின் விலையை மத்திய அரசு, 10 ரூபாய் குறைத்துள்ளது.
நாடு முழுதும் தக்காளி விலை கடந்த சில நாட்களாக கடுமையாக உயர்ந்து வருகிறது. அதிகபட்சமாக 1 கிலோ, 250 ரூபாய் வரை விற்கப்பட்டது.இந்த திடீர் விலையேற்றத்தை தடுக்கும் வகையில் மத்திய அரசு, கூட்டுறவு அமைப்புகள் வாயிலாக 1 கிலோ தக்காளியை, 90 ரூபாய்க்கு விற்றது.இதையடுத்து, சந்தையில் தக்காளி விற்பனை விலை சற்று குறைந்துஉள்ளது.
கூட்டுறவு அமைப்புகள் வாயிலாக விற்கப்படும் தக்காளியின் விலை, கிலோவுக்கு, 10 ரூபாய் குறைத்து, 80 ரூபாயாக மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. இது நேற்று முதல்நடைமுறைக்கு வந்தது.கூட்டுறவு அமைப்புகள், ரேஷன் கடைகள் உள்ளிட்டவை வாயிலாக இந்த விலைக்கு தக்காளி விற்கப்படுகிறது.
மத்திய அரசின் நுகர்வோர் விவகாரத் துறை நேற்று வெளியிட்ட செய்தியில், ‘தேசிய அளவில் தக்காளியின் சராசரி விலை, 117 ரூபாயாக குறைந்துள்ளது. இது வரும் நாட்களில் மேலும் குறையும்’ என, குறிப்பிடப்பட்டுள்ளது.நேற்றைய நிலவரப்படி, புதுடில்லியில் கிலோ தக்காளி, 175 ரூபாய்க்கும், மும்பையில் 150 ரூபாய்க்கும், சென்னையில் 132 ரூபாய்க்கும் விற்கப்பட்டன.

