
மது போதையில் கல்லூரி மாணவிக்குப் பாலியல் தொல்லை!
திருச்சி முக்கொம்பு பகுதிக்குக் காதலனுடன் சென்றிருந்த கல்லூரி மாணவிக்குப் பாலியல் தொல்லை அளித்த 4 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
திருச்சி மாவட்டம் ஜீயாபுரம் அடுத்து அமைந்துள்ளது முக்கொம்பு சுற்றுலா தளம். திருச்சிக்கு மிக அருகிலும், நகரத்திற்கு சற்று வெளிப்புறமாகவும் அமைந்துள்ளதால் இங்கு ஏராளமான காதலர்கள் அனுதினம் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று காதலருடன் கல்லுரி மாணவி ஒருவர் முக்கொம்பு சென்றுள்ளார்.
அப்போது அங்குக் காரில் வந்த காவலர்கள் 4 பேர் காதலர்கள் இருவரையும் அழைத்து விசாரணை செய்துள்ளனர். பின்னர் இருவரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்த வேண்டும் என்று கூறிவிட்டு காதலனை தனியாக அழைத்து விசாரித்துவிட்டு, அந்தச் சிறுமியைத் தாங்கள் வந்த காருக்குள் அழைத்து விசாரணை என்ற பெயரில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இந்தச் சம்பவத்தின்போது காவலர்கள் 4 பேரும் மது போதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி முக்கொம்பு நுழைவு வாயிலில் நின்றிருந்த காவலர்களிடம் இதுகுறித்து முறையிட்டுள்ளார். அவர்கள் வழங்கிய வழிகாட்டுதலின் அடிப்படையில் ஜீயபுரம் காவல் நிலையத்தில் மாணவி தனக்கு நேர்ந்த அவலத்தைப் புகாராக வழங்கினார். மாணவி அளித்த புகாரின் அடிப்படையில், திருச்சி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் வருண்குமார் விசாரணைக்கு உத்தரவிட்டார்.
விசாரணையின் அடிப்படையில் காவல் உதவி ஆய்வாளர் சசிக்குமார், சங்கரபாண்டி, பிரசாத், சித்தார்த் ஆகிய 4 பேர்மீது ஜீயபுரம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. வழக்கு செய்யப்பட்டதைத் தொடர்ந்து 4 காவலர்களும் உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் 4 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.


