
சென்னை: சீர்திருத்த திருமணங்களுக்குத் திமுக ஆட்சி சட்டஅங்கீகாரம் அளித்தது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் திருமங்கலம் கோபால் இல்ல திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். பின்னர் விழாவில் பேசிய முதல்வர்,
சீர்திருத்த திருமணங்களுக்கு அங்கீகாரம் அளித்தது திமுக ஆட்சி. அண்ணா தலைமையில் அமைந்த திமுக அரசு சீர்திருத்த திருமணங்களுக்கு அங்கீகாரம் அளித்தது. திமுக ஆட்சிக்கு வந்த 1967 ம் ஆண்டுக்கு முன் சுயமரியாதை திருமணங்கள் நடத்த முடியாத சூழல் இருந்தது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுகவில் எத்தனையோ அணிகள் இருந்தாலும் சிறந்த அணி இளைஞரணி தான் என்று முதலமைச்சர் புகழாரம் சூட்டியுள்ளார். சேலத்தில் இளைஞரணி மாநில மாநாட்டுக்காக மாவட்ட வாரியாக உதயநிதி கூட்டங்கள் நடத்தி வருகிறார். உதயநிதி தலைமையில் திமுக இளைஞரணி கம்பீரமாகச் செயல்பட்டு வருகிறது. திமுக இளைஞரணியின் மாநில மாநாடு சேலத்தில் நடைபெற உள்ளது என்று முதல்வர் தெரிவித்தார். சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி மக்களைக் குழப்பி வருகின்றனர். தேவையற்ற பிரச்சாரங்களை, பொய் செய்திகளை ஊடகங்கள்மூலம் மக்களைக் குழப்பிக்கொண்டிருக்கிறார்கள் என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.
திமுக ஆட்சியில் ரூ.5500 கோடி மதிப்பிலான கோயில் சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக வளர்ச்சியைப் பொறுக்கமுடியாமல் தவறான, தேவையற்ற பிரச்சாரங்களை, பொய் செய்திகளைப் பரப்பி வருகின்றனர் என்றார்.
சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி நிர்மலா சீதாராமன் மக்களைக் குழப்பிக் கொண்டிருக்கிறார் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார். பொய் செய்தியைப் பரப்பி மக்களைக் குழப்பும் செயலில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனே ஈடுபடுகிறார். எனக்கு எதிராக அவதூறு பரப்பும் வகையில் பொய் செய்தியைப் பரப்பிய போலீஸ் அதிகாரிமீது வழக்கு போட்டுள்ளேன். நான் சொல்லாத ஒன்றை என் பெயரில் வாட்ஸ் அப்மூலம் பரப்பி வரும் போலீஸ் அதிகாரிமீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பக்தி எல்லாம் இல்லை; அதெல்லாம் பகல் வேஷம். நிர்மலா சீதாராமனுக்கு உண்மையிலேயே பக்தி என்று ஒன்று இருந்திருந்தால் திமுக அரசை அவர் பாராட்டி இருக்க வேண்டும் என்று ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்தார். திராவிட மாடல் ஆட்சியை வீழ்த்துவதற்காகத் திட்டமிட்டு சிலர் தவறான கருத்துக்களை பரப்பி வருகின்றனர் என்று முதலமைச்சர் தெரிவித்தார்.


