
அரசுப் பள்ளியில் இலவச சைக்கிள் வழங்கும் விழாவின்போது நீண்ட நேரம் மாணவி வெயிலில் நிற்க வைக்கப்பட்டதால் 10ம் வகுப்பு மாணவி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது…
திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை அடுத்த மங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் அஞ்சலை என்ற சிறுமி 10ம் வகுப்பு படித்து வந்தார். பள்ளியில் நேற்று இலவச சைக்கிள் வழங்கும் விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இதற்காகப் பள்ளி மாணவிகள் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக வெயிலில் நிற்க வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. நீண்ட நேரம் மாணவிகள் வெயிலில் நிற்கவைக்கப்பட்ட நிலையில், சிறுமி அஞ்சலை சோர்வு காரணமாக மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார்.
கீழே விழுந்த மாணவியின் முகத்தில் ஆசிரியர்கள் தண்ணீரை தெளித்து முதலுதவி அளிக்க முயற்சித்துள்ளனர். ஆனால் சிறுமியின் உடல்நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் அதே பள்ளியில் மயக்கமடைந்த மாணவியின் சகோதரி 12ம் வகுப்பு படித்து வரும் நிலையில், அந்த மாணவிக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு உறிவினர்களிடம் மாணவியின் நிலைகுறித்து தெரிவிக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து பள்ளி ஆசிரியர்கள் மயக்கமடைந்த மாணவியை அழைத்துக் கொண்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு விரைந்தனர்.
அங்கு மாணவியைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் மாணவி வரும் வழியிலேயே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். இதனால் மாணவியின் பெற்றோரும், உடன் பயின்றவர்களும் அதிர்ச்சியடைந்தனர்.அரசு ஆசிரியர்களின் அலட்சியத்தால் மாணவி பலியான சோகம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் கூறுகையில், மாணவியின் உடல் நிலையில் இதற்கு முன்னர் எந்தவித பாதிப்பும் கிடையாது. ஆனால் நீண்ட நேரம் மாணவி வெயிலில் நிற்க வைக்கப்பட்டதாலேயே உயிரிழந்திருப்பதாகக் குற்றம் சாட்டி உள்ளனர். இது தொடர்பாகக் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


