
நரிக்குறவர் மக்களுக்கான பல்பொருள் அங்காடியைப் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் பக்கிரிபாளையம், செங்கம், கட்டமடவு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நரிக்குறவர் இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் மணி மாலை, ருத்ராட்ச மாலை, ஊசி மணி மாலை போன்றவற்றை விற்பனை செய்யும் தொழிலைச் செய்து வருகின்றனர்.
குறிப்பாக இவர்கள் அனைவரும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஊர்களுக்குச் சென்று மணி மாலை விற்பனை செய்து வாழ்ந்து வருகின்றனர். தங்களுக்கு கடைகள் கட்டி தர வேண்டும் எனக் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் அப்போதைய மாவட்ட ஆட்சியர் கந்தசாமியிடம் கோரிக்கை விடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை வேலூர் சாலையில் இடம் தேர்வு செய்யப்பட்டு. 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 9 கூடாரத்தில் 36 கடைகள் கட்டப்பட்டது. கொரோனா ஊரடங்கு காலத்தில் கட்டப்பட்ட இந்தப் பல்பொருள் அங்காடி திறக்கப்படாமல் இருந்தது.
தற்போது முழு பணிகள் முடிக்கப்பட்டு தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நரிக்குறவர் மக்களுக்கான பல்பொருள் அங்காடியைத் திறந்து வைத்தார். இந்த இடத்தில் நரிக்குறவர் இன மக்கள் தாங்கள் செய்யும் பொருட்களை விற்பனை செய்ய அவர்களுக்கான கடைகளை ஒதுக்கி அதற்கான ஆணையும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.


