
திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகில் ரூ.51 கோடி மதிப்பிலான 51 சென்ட் அரசு நிலம் ஜேசிபி எந்திரம்மூலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
திருவள்ளூர் மாவட்ட தலைநகரில் சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலை வட்டாட்சியர் அலுவலகம் அருகில் அரசுக்குச் சொந்தமான நிலத்தில் கடந்த 1991-ல் அரசு ஓய்வூதியர் சங்கம் சார்பில் கட்டிடம் கட்டப்பட்டது. அந்தக் கட்டிடம் அருகில் உள்ள கிட்டத்தட்ட 51 சென்ட் நிலத்தையும் ஆக்கிரமித்துச் சுற்றுச் சுவர் எழுப்பி மேல் வாடகைக்கு சைக்கிள் ஸ்டான்ட் நடத்த குத்தகைக்கு விட்டதாகக் கூறப்படுகிறது. நகரின் முக்கிய சாலையில், வட்டாட்சியர் அலுவலகம் அருகில் கிட்டத்தட்ட 32 வருடமாக இருந்த ஆக்கிரமிப்பை அகற்றாமல் இருந்துள்ளனர்.
இந்நிலையில் ராஜாஜிசாலையில் உள்ள நகராட்சிமேல் நிலைப்பள்ளி செயல்பட்டு வரும் இடம் போதுமானதான இல்லாத சூழ்நிலை நிலவுகிறது. இதனால் வட்டாட்சியர் அலுவலகம் அருகில் உள்ள ஆக்கிரமிப்பு நிலம் மற்றும் ஏற்கனவே செயல்பட்டு வந்த நீதிமன்ற கட்டிடம் ஆகிய இடங்களை அகற்றி புதிய கட்டிடம் கட்ட ஏதுவாக இருக்கும் என மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.இதனையடுத்து மாவட்ட கலெக்டர் த.பிரபு சங்கர் உத்தரவின் பேரில் திருவள்ளூர் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார் ஆக்கிரமிப்புை உடனடியாக அகற்ற வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.
இதனையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஜேசிபி எந்திரம்மூலம் சைக்கிள் ஸ்டான்டில் அமைக்கப்பட்ட மேற்கூரையை அகற்றினர். மேலும் ஸ்டான்டில் நிறுத்தி வைத்திருந்த வாகனங்களையும் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் பரபரப்பாகக் காணப்பட்டது. ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தின் மதிப்பு ரூ.51 கோடி இருக்கும் என்றும், ஆக்கிரமிப்பை அகற்றிய பிறகு நகராட்சி சார்பில் மேல்நிலைப்பள்ளி கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவித்தனர். மேலும் அரசு நிலத்தை ஆக்கிரமித்துக் குத்தகைக்கு விட்ட அரசு ஓய்வூதியர் சங்கத்தினரிடம் விசாரணை நடத்தப்படும் எனவும் தெரிவித்தனர்.


