
கோயம்புத்தூர் விழாவையொட்டி கொடிசியா மைதானத்தில் மாபெரும் உணவுத் திருவிழா தொடங்கியுள்ளது.
மூன்று நாட்கள் நடைபெரும் இந்த உணவு திருவிழாவைக் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி மற்றும் மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
கோவை: கோவையின் பாரம்பரிய கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் கோயம்புத்தூர் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.இந்நிலையில் இந்த ஆண்டு கோயம்புத்தூர் விழாவையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் மாநகரத்தில் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாகக் கோவை கொடிசியா மைதானத்தில் மாபெரும் உணவுத் திருவிழா துவங்கியது.ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் நடைபெறும் டேஸ்ட் ஆஃப் கோயம்புத்தூர் என்கிற உணவு திருவிழாவைக் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி மற்றும் மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
இன்று முதல் மூன்று நாட்கள் நடைபெறும் உணவு திருவிழாவில் சைவம், அசைவம் எனக் கோவையைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட உணவககங்கள் பங்கேற்றனர்.தொடர்ந்து பொதுமக்களின் கண்ணுக்கு விருந்தளிக்கும் விதமாகப் பாரம்பரிய தமிழ் கலைகளான ஒயிலாட்டம், பறையாட்டம், தப்பாட்டம் உள்ளிட்டவை நடைபெற்றது. முன்னதாக உணவுத் திருவிழா துவக்க நிகழ்ச்சியை முன்னிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட ஆதரவற்ற குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் வரவழைக்கப்பட்டு இலவசமாக உணவுகள் வழங்கப்பட்டது.



