புதுச்சேரியில் பைனான்சியர் முருகேசன் என்பவர் வீட்டில் இருந்து, ரூ.1 கோடி மதிப்புள்ள 2 ஆயிரம் நோட்டுகள் மற்றும் ரூ.2.60 கோடி மதிப்புள்ள 500 ரூபாய் நோட்டுகளை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரி: புதுச்சேரியில் மக்களவை தொகுதி தேர்தலுக்கான வாக்குப் பதிவு நாளை (ஏப்.19) ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் துறை செய்து வருகின்றது. புதுச்சேரியை பொருத்தவரையில் 967 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன
இந்த தேர்தலில் 2587 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 1254 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 1324 வி வி பேட் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இவை புதுச்சேரி லாஸ்பேட்டையில் அரசு மகளிர் பொறியியல் கல்லூரி, மோதிலால் நேரு பாலிடெக்னிக் கல்லூரி ஆகிய இரு வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள ஸ்டிராங் ரூமில் வைக்கப்பட்டன. இந்நிலையில் ஸ்டிராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த வாக்குப் பதிவு இயந்திரங்களை அந்தந்த வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பி வைக்கும் பணி இன்று நடைபெற்றது. முகவர்கள் முன்னிலையில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வாகனங்களில் ஏற்பட்டு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டன. புதுச்சேரி மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி குலோத்துங்கன் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்தநிலையில் புதுச்சேரியில் பைனான்சியர் முருகேசன் என்பவர் வீட்டில் இருந்து, ரூ.1 கோடி மதிப்புள்ள 2 ஆயிரம் நோட்டுகள் மற்றும் ரூ.2.60 கோடி மதிப்புள்ள 500 ரூபாய் நோட்டுகளை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரி ஜான்சி நகரில் ஒரு வீட்டில் இரண்டரை கோடி பணம் இருப்பதாக, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, ஜான்சி நகரில் பைனான்சியர் முருகேசன் என்பவர் வீட்டில் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அப்போது, முருகேசன் என்பவர் வீட்டில் இருந்து, ரூ.1 கோடி மதிப்புள்ள 2 ஆயிரம் நோட்டுகள் மற்றும் ரூ.2.60 கோடி மதிப்புள்ள 500 ரூபாய் நோட்டுகளை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது குறித்து விசாரணை நடந்து வருகிறது. புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு முருகேசன் நெருக்கமானவர்.

