
திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவிலில் பங்குனித் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது.இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்துக் கிரிவலப்பதை வழியாக இழுத்து வந்தனர்.
திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கொண்டாடப்படும் விழாக்களில் மிகவும் பிரசித்தி பெற்றது பங்குனி பெருவிழா வாகும்.
15 நாட்கள் கொண்டாடப்படும் இந்தத் திருவிழா கடந்த 15 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவினை முன்னிட்டு முருகப்பெருமான் தெய்வானையுடன் காலையில் பல்லக்கிலும், மாலையில் தங்க மயில் வாகனம், தங்க குதிரை வாகனம், பூத வாகனம், அன்ன வாகனம், சேஷ வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளித் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வந்தார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முருகப்பெருமான் தெய்வானை திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
இதில் மதுரையிலிருந்து மீனாட்சி அம்மனும்.பிரியாவிடையுடன் சுந்தரேஸ்வரர் ஆகியோர் கலந்துகொண்டு முருகப்பெருமான் திருக்கலயாணம் கோலாகலமாக நடைபெற்றது.
இரவு மீனாட்சி அம்மன் பிரியாவிடையுடன் சுந்தரேஸ்வரர் வழியனுப்பு விழா நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து அம்பாரி வாகனத்தில் முருகப்பெருமான் தெய்வானையுடன் எழுந்தருளிப் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று காலையில் பெரிய தேரோட்டம் நடைபெற்றது.
இதனை முன்னிட்டு காலையில் உற்சவர் சன்னதியில் முருகன் தெய்வானைக்கு பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகை சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் 5:30 மணிக்குத் தேரில் எழுந்தருளினார்.
அங்குக் கூடியிருந்த பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்பித் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் கிரிவலப் பாதை வழியாக ஆடி அசைந்து சென்றது பக்தர்களைப் பரவசப்படுத்தியது. தேரின் முன்பாகச் சிறிய தேரில் விநாயகர் சென்றார். விழாவில் திருப்பரங்குன்றம், திருமங்கவம் அவனியாபுரம், நிலையூர், கூத்தியார்குண்டு, தனக்கன்குளம் உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு அரோகரா கோஷமிட்டபடி தேரை வரம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தார்கள்.



