
மறைமலை நகர் : செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை மாவட்டங்களின் மண்டல வி.சி., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், மறைமலை நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், நடந்தது.
கூட்டத்தில், கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசியதாவது: கட்டாயமாக, நாம் மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற நம்பிக்கையோடு இருக்க வேண்டும். தேர்தல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, நாம் நடிப்பதாக, சிலர் விவாதங்களில் கூறி வருகின்றனர்.
வரும் 2026ல், நமக்குப் பின்னடைவு ஏற்பட்டால் கூட, இந்தப் போராட்டத்திலிருந்து ஒருபோதும் பின்வாங்கக் கூடாது. கூட்டணியிலிருந்து கொண்டே, மக்கள் பிரச்னைகளைப் பேசுகிற துணிச்சல் உள்ள இயக்கம் வி.சி., தான்.
படிப்படியாக, அரசு மதுபானக் கடைகளை மூடி, வரலாற்றில் நல்ல பெயர் எடுத்துக் கொள்ளுங்கள் என, வி.சி., வாழ்த்துகிறது. தி.மு.க., வரும் தேர்தலுக்குள் மதுபானக் கடைகளை மூடினால், எத்தனை விஜய் வந்தாலும், தி.மு.க., வை அசைக்க முடியாது.
மதுபான கடைகளை மூடினாலே வி.சி., க்கு வெற்றி தான். வி.சி., போராட்டத்தால் அரசு மதுக்கடைகளை மூடியது என, மக்கள் வரவேற்பர். அது தான் நமக்குக் கிடைத்த வெற்றி. இவ்வாறு அவர் பேசினார்.


