Thirumavalavan: திமுகாவுக்கு திருமா அறிவுரை!

Advertisements

நச்சு சாராய சாவுகளால் ஏற்படுகிற பாதிப்பைவிடச் சட்டபூர்வமாக அரசு விற்பனை செய்கிற மதுபானங்கள் மனித வளத்தைப் பெருமளவில் சேதப்படுத்துவதாக எம்.பி.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

மேலவளவில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காகச் சென்னையிலிருந்து விமானம்மூலம் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். அவருக்கு அக்கட்சித் தொண்டர்கள் விமான நிலையத்தில் வரவேற்பு அளித்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், உள்ளாட்சி அமைப்புகளில் சமூக நீதியை நிலை நாட்ட வேண்டும் என்ற அறப்போரில் முருகேசன் உட்பட ஏழு பேர் மேலவளவில் பலியான சம்பவத்திற்கு நினைவுத் தினம் இன்று. பலியானவர்களுக்கு வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் படி போதிய இழப்பீடு வழங்க வேண்டும்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளரை ஆதரித்து 4, 5ம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பரப்புரை மேற்கொள்ள இருக்கிறோம். விசா சாராயம் உயிரிழப்பு தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்தியா முழுவதும் அவ்வப்போது நிகழ்ந்து வருகின்றன. இதற்கு முழு மதுவிலக்கு ஒன்று தான் தீர்வு. அரசு மதுபானம் என்பது தீர்வாக இருக்க முடியாது. நச்சு சாராய சாவுகளால் ஏற்படுகிற பாதிப்பைவிடச் சட்டபூர்வமாக அரசு விற்பனை செய்கிற மதுபானங்கள் மனித வளத்தைப் பெருமளவில் சேதப்படுத்துகிறது. இளம் தலைமுறையினர் ஆற்றல் இழந்து பாலாகி வருகின்றனர். இதனால் ஏற்படுகிற பாதிப்பு தேசத்திற்கு பேரிழப்பு என்பதை அரசு உணர வேண்டும். ஆகவே மாநில அரசு மட்டுமின்றி இந்திய ஒன்றிய அரசும் மதுவிலக்கு கொள்கைபற்றிப் பரிசீலனை செய்ய வேண்டும். தேசிய அளவில் மதுவிலக்கு கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும். அப்போதுதான் கள்ளச்சாராயம் காய்ச்சுவதை தடுக்க முடியும்.

மெத்தானால் என்கிற நச்சு ஆல்கஹால் கள்ளச் சந்தையில் புழக்கத்தில் உள்ளது. அதற்குப் பின்னால் ஒரு கும்பல் இயங்குகிறது. அந்த மாபியா கும்பல் யார் என்பதை கண்டுபிடித்துத் தண்டிக்க வேண்டும். கள்ளச்சாராயம் விற்ற ஓர், இருவரை கைது செய்வது கவனக்குறைவாக இருந்த அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுப்பது என்பது போதுமான நடவடிக்கை அல்ல. மதுவிலக்கு சட்ட மசோதா நல்லது தான். ஆனால் பூரண மது விலக்கை நடைமுறை படுத்த முதலமைச்சர் முன்வர வேண்டும். அது திமுகவிற்கு, திமுகவின் எதிர்காலத்திற்கு பெரிய அளவிலே வெகுமக்களுடைய செல்வாக்கை பெருக்கும். குறிப்பாகத் தாய்மார்கள் பெரிய நன்றி கடன் பட்டவர்களாக இருப்பார்கள். கள்ளக்குறிச்சியில் நான் சென்று மக்களிடம் கேட்டபோது கள்ளச்சாராயத்தை ஒழியுங்கள் என்று மக்கள் கூறவில்லை. அரசு மதுபான கடைகளை மூடுங்கள் என்று தான் அவர்கள் கோரிக்கையாக உள்ளது.

நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவரின் உரை உண்மைக்கு மாறான உரை. தவறான செய்திகளைக் குடியரசுத் தலைவர் பதிவு செய்வது அதிர்ச்சி அளிக்கிறது. ஆயோத்தி கோவிலுள்ள பைசாபாத் தொகுதியில் பாஜக தோல்வி அடைந்து உள்ளது. சபாநாயகர் ஓம் பிர்லாவும் ஒரு தலைபட்சமாகச் செயல்படுகிறார்.

நடிகர் விஜய் மாணவர்களிடம் பேசியதில் மாணவர்களை ஊக்கப்படுத்தும் முறையாகவே நான் பார்க்கிறேன். அதில் பிழையும், உள்நோக்கமும் இருப்பதாகத் தெரியவில்லை. நல்ல தலைவர்கள் உருவாக வேண்டும் எனக் கூறியது மாணவர்களை நல்ல தலைவர்களாக உருவாக்க வேண்டும் என்பதற்காகக் கூறியதாகவே நான் கருதுகிறேன்.

காந்தியடிகள் கள் உட்பட எந்த மதுவும் கூடாது என்று தான் வலியுறுத்தினார். காங்கிரஸ் கட்சிக்காரர்கள் முழு மதுவிலக்கை வலியுறுத்த வேண்டும் என்பது தான் காந்திக்கு செலுத்துகிற நன்றி கடன் ஆகிட முடியும்.

ஒன்றிய அரசு எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. ராகுல் காந்தியின் மைக் ஆப் செய்தது வழக்கமான ஒன்றுதான் வாடிக்கையான ஒன்றுதான் என்று கூறினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *