
திருச்செந்தூர் கோவிலில் முறைகேடு செய்தோர் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இதன் பின்னர், அவர் பணம் வசூலிக்கப்படுவதை கண்டுபிடிக்க பக்தர் போல கோவிலுக்கு வந்தார். அப்போது, முறைகேடான வழியில் தரிசனத்திற்குச் செல்ல சில அர்ச்சகர்கள் நான்காயிரம் ரூபாய் கட்டணம் கேட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அமைச்சர் நேரடியாக செயலி மூலம் பணத்தை செலுத்தியுள்ளார்.
தொடர்ந்து அவர் அமைச்சர் என்பது தெரியவந்த நிலையில், பணம் பெற்ற அர்ச்சகர்கள் கையும் களவுமாக சிக்கியுள்ளனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து கோவிலில் நடைபெற்று வந்த பல்வேறு முறைகேடுகள் குறித்து அமைச்சர் விசாரணை மேற்கொண்டார். அமைச்சரின் இந்த அதிரடி நடவடிக்கை திருச்செந்தூர் கோவில் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, திருச்செந்தூர் முருகன் கோவிலில் பொதுமக்கள் பக்தர்கள் சமூக ஆர்வலர்களின் புகாரை தொடர்ந்து ரகசிய ஆய்வு செய்ததாகத் தெரிவித்தார்.
தரிசனத்திற்கு பணம் பெற்றுக் கொண்டு முறைகேடாக அனுப்பிய கோவில் அர்ச்சகர்கள், அதற்கு உறுதுணையாக இருந்த பணியாளர்கள் காவலாளிகள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். முறைகேட்டில் ஈடுபட்டதற்கான விளக்கங்கள் தான் கேட்கப்பட்டதே தவிர மன்னிப்பு கடிதம் கேட்கவில்லை என்று தெரிவித்தார்.
கோவிலில் பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்யவும் அடிப்படை வசதிகள், உள்ளிட்ட பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது என்று கூறினார். ஆய்வின் முடிவில் அதன் அறிக்கையை வெளியிடுவதாகத் தெரிவித்தார்.


