
14 ஆயிரம் ஊழியர்கள் பணிநீக்கம்! நோக்கியா நிறுவனம்
நடப்பு ஆண்டின் மூன்றாவது காலாண்டில் நோக்கியா உபகரணங்களின் விற்பனை 19 சதவீதம் சரிந்துள்ளதால் 14,000 ஊழியர்கள்வரை பணிநீக்கம் செய்ய உள்ளதாக நோக்கியா நிறுவனம் அறிவித்துள்ளது.
உலக சந்தையில் செல்போன் முதல் நெட்வொர்க் சாதனங்கள்வரை பிரபலமான நிறுவனம் நோக்கியா. ஒரு காலத்தில் அதிக விற்பனை ஆகும் பிராண்டாகவும் இருந்தது. 2007 ஆம் ஆண்டின் இறுதியில், உலக அளவிலான ஸ்மார்ட்போன் விற்பனையில் பாதி அளவுக்கு நோக்கியா போனாக இருந்தது. 2010ம் ஆண்டுக்குப் பிறகு விற்பனையில் சரிவைச் சந்தித்தது. எனினும் முன்னணி நிறுவன தயாரிப்புகளுக்கு இணையாகப் புதுப்புது மாடல்களை அறிமுகம் செய்து உலக சந்தையில் போட்டி போடுகிறது.
அதேசமயம், சவாலான சந்தை சூழலை எதிர்கொள்ள, செலவுகளைக் குறைத்து செயல்திறனை அதிகரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. 2026ஆம் ஆண்டின் இறுதிக்குள் செலவுகளைக் கட்டுக்குள் கொண்டுவர இலக்கு வைத்துள்ளது.
இந்நிலையில், நடப்பு ஆண்டின் மூன்றாவது காலாண்டில் நோக்கியா உபகரணங்களின் விற்பனை 19 சதவீதம் சரிந்துள்ளது. இதனால் லாபமும் குறைந்துள்ளது. எனவே, செலவுக் குறைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக 14,000 ஊழியர்கள்வரை பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
நோக்கியாவில் தற்போது 86,000 ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். ஆட்குறைப்புக்கு பிறகு 72,000 முதல் 77,000 வரையிலான ஊழியர்கள் இருப்பார்கள் எனக் கூறப்படுகிறது.



