
பகல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 28 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து இந்தியா கடந்த 7-ஆம் தேதி ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் கடும் ராணுவ நடவடிக்கை மேற்கொண்டது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் முகாம் அமைந்துள்ள தீவிரவாதிகளை குறி வைத்து இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல் தொடுத்தது. பாகிஸ்தான் ராணுவமும் சண்டையிட்ட நிலையில் இந்தியாவின் அதிரடி தாக்குதலுக்கு பாகிஸ்தான் பணிந்தது.
இதனிடையே, பாகிஸ்தானுக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய இந்திய ராணுவத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நடிகர் ரஜினிகாந்தின் திரைப்பட படப்பிடிப்பு நடைபெற உள்ளது. இதற்கு செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்தபோது அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அன்னையர் தின வாழ்த்துகளை அவர் தெரிவித்துக் கொண்டார். தொடர்ந்து மத்திய அரசுக்கும், ராணுவத்தினருக்கும் அவர் வாழ்த்து தெரிவித்தார்.அதில், “பாகிஸ்தான் நாட்டிற்கு உள்ளேயே சென்று அங்கு இருக்கும் தீவிரவாதிகள் முகாம்களை அழித்த இந்திய ராணுவத்திற்கு மிகுந்த பாராட்டுக்கள்.
இந்த போரை வலிமையாகவும் திறமையாகவும் வீரியத்துடன் கையாண்ட பாரத பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் மற்றும் முப்படை அதிகாரிகளுக்கும், வீரர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள்… நன்றி” என்று கூறிவிட்டுச் சென்றார்.நெல்சன் இயக்கி வரும் ஜெயிலர் 2 திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக அவர் கோழிகோடு செல்வது குறிப்பிடத்தக்கது.


