
இந்தியா – பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட்டுள்ள நிலையில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட ஐபிஎல் கிரிக்கெட் தொடர் எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் காணப்படுகிறது. இது குறித்து பிசிசிஐ முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே பஞ்சாப்பில் நடந்த போட்டி, பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
இந்த பதற்ற நிலை காரணமாக எஞ்சிய போட்டிகள் ஒரு வார காலத்துக்கு தள்ளி வைக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. இதனிடையே இந்தியா நடத்திய 3 நாட்கள் அதிரடி தாக்குதலுக்கு பின்னர் பாகிஸ்தான் பணிந்ததை அடுத்து, இரு நாடுகளுக்கும் இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட்டுள்ளது.அதனைத் தொடர்ந்து எல்லைப் பகுதியில் காணப்படும் பதற்ற நிலை தணியத் தொடங்கியுள்ளது.
இந்த சூழலில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஐபிஎல் தொடர் மீண்டும் எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் காணப்படுகிறது.எப்போது வேண்டுமானாலும் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்று கூறப்படுவதால் ஒவ்வொரு அணிகளும் அதற்கான ஏற்பாட்டில் தீவிரம் காட்டி வருகின்றன.
இன்னொரு பக்கம் ஐபிஎல் போட்டிகளை விரைந்து தொடக்க புதிய அட்டவணை ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பிசிசிஐ துணை தலைவர் ரஜிவ் சுக்லா ஐபிஎல் போட்டிகளை விரைந்து தொடங்குவதற்கு பிசிசிஐ அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். ஒரு வாரத்திற்கு போட்டிகளை நிறுத்தி வைத்துள்ளோம்.நேற்றுதான் சண்டை நிறுத்தம் ஏற்பட்டுள்ளது.
வெகு விரைவில் போட்டித் தொடர் ஆரம்பம் ஆகும் என்று தெரிவித்தார். இதற்கிடையே திட்டமிட்டபடி போட்டிகளை நடத்தி முடிப்பதற்காக ஒவ்வொரு நாளும் 2 போட்டிகளை நடத்துவதற்கு ஐபிஎல் நிர்வாகம் முடிவு எடுத்திருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.


