
ராமலிங்க அடிகள் பிறந்த தினம்.
சமரச சன்மார்க்க நெறிகளை வகுத்தவரும், பசிப்பிணி போக்க பாடுபட்ட ஞானியுமான வள்ளலார் ராமலிங்க அடிகளாரின் பிறந்த தினமான இன்று அவரை நினைவு கூர்வோம்.இவர் 1823 -ஆம் ஆண்டு அக்டோபர் 05-ஆம் தேதி சிதம்பரம் அடுத்த மருதூரில் பிறந்தார்.முருகன் பாடல்களைப் பாடிவிட்டு வருமாறு கோவிலுக்கு அனுப்பி வைக்கப்பட்ட ராமலிங்கம், அங்குச் சென்று பாட்டு பாடியதோடு, மடை திறந்த வெள்ளமாய் சொற் பொழிவாற்றினார். அச்சிறு வயதிலேயே ராமலிங்கம் ஆன்மீகத்தோடு மனித நேயத்தையும் உணர்த்தினார்.
பசி, பட்டினி, கல்வியின்மையால் மக்கள் படும் துன்பம் இவற்றைக் கண்டு துடித்தார். ஜீவகாருண்யமே மோட்சத்திற்கான வழி என்று எடுத்துக் கூறினார்.சமரச சன்மார்க்க சங்கம் என்ற அமைப்பை 1865-ல் நிறுவினார். மக்கள் எளிதாகப் பின்பற்றக்கூடிய கொள்கைகளை வகுத்தார்.கடவுள் ஒருவரே, உயிர் பலி, ஜாதி மத, பொருளாதார வேறுபாடுகள் கூடாது. பிற உயிர்களைத் தன்னுயிர் போலக் கருத வேண்டும். பசித்தவர்களுக்கு உணவளிப்பது மாபெரும் தவம் போன்ற புண்ணியம் என்றார். வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன். என்று உள்ளம் உருகி கூறியுள்ளார். அருட்பெருஞ் சோதி, தனிப்பெருங்கருணை என்பதே அவரின் தார்மீக வாசகம். அவர் தனது 50-ஆவது வயதில் 1874-ல் மறைந்தார்.


