
தென்காசி மாவட்டம் வி கேப்புதூர் அருகே முத்தூட் நகை கடன் நிறுவன ஊழியர்கள் 20க்கும் மேற்பட்டவாடிக்கை யாளரிடம் சுமார் 2 கோடி மதிப்புள்ள சுமார் 2.1/2 கிலோ எடையுள்ள தங்க நகைகளை வாங்கி மோசடி செய்ததாக ஊத்துமலை கிராம மக்கள் புகார் அளித்துள்ளனர். நிதி நிறுவனம்மீது நடவடிக்கை எடுத்து நகையை மீட்டு தரக் கோரி 100க்கும் மேற்பட்ட மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தென்காசி மாவட்டம் வி கேப்புதூர் அருகேயுள்ள ஊத்துமலையில் இயங்கி வரும் முத்தூட் நகை கடன் நிறுவனம் இங்கு அதே பகுதியைச் சேர்ந்த இளவரசன் என்பவர் மேலாளராகவும், வர்ஷா, இம்மானுவேல் ஆகியோர் ஊழியர்களாகவும் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் தங்கள் கிளையின் வருவாய் மற்றும் வணிகத்தை அதிகரிக்கும் பொருட்டு, இவர்கள் அனைவரும் வீடு வீடாகச் சென்று பொதுமக்களிடம் கனிவாகப் பேசித் தங்கள் வணிகத்தைப் பெருக்கியுள்ளனர்.
அடகு வைக்க மறுப்பவர்களிடம் நீங்கள் வேலைக்குச் சென்றால் நகை பாதுகாப்பாக இருக்காது, எங்களிடம் வைத்தால் பாதுகாப்பாகவும் இருக்கும், அதற்கு வட்டியும் தருகிறோம் என மூளைச் சலவை செய்துள்ளனர். மோசடிக் கும்பலுக்கு உதவியாகக் கலைச் செல்வி என்ற பெண் செயல்பட்டுள்ளார்.
அதிக வட்டிக்கு மயங்கி ஒரு சிலர் தங்கள் நகைகளைக் கொடுக்கத் தொடங்கியள்ளனர். 1 லட்சம் ரூபாய்க்கு 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை மாதந்தோறும் வட்டி அளித்துள்ளனர். நகைகளைக் கொடுத்து வட்டி வாங்கியவர்கள் மாதந்தோறும் வட்டி வருவதால் தங்கள் உறவினர்களிடமும் கூறி நகைகளை இந்தக் கிளையில் கொடுத்துள்ளனர்.
இது போன்று சுமார் 20 பேரிடம் 100 கிராம் முதல் 750 கிராம் வரையென மொத்தம் இரண்டரை கிலோ நகைகளை வாங்கி மாதா மாதம் வட்டி அளித்துள்ளது இந்தக் கும்பல். 6 மாதங்கள் மட்டுமே வட்டி கொடுத்து வந்த முத்தூட் ஊழியர்கள், அடுத்தடுத்து வட்டி கொடுக்காமல் சாக்குப் போக்கு கூற ஆரம்பித்துள்ளனர். பெரும்பாலானோர் கலைச் செல்வியின் உறவினர்கள் என்பதால் அவருக்குப் பணம், நகை அளித்தவர்கள் நெருக்கடி அளிக்கத் தொடங்கியபோது, எதுவாக இருந்தாலும் முத்தூட் கிளைக்குச் சென்று கேளுங்கள் என அவர் கூறி விட்டதாகக் கூறப்படுகிறது.
முத்தூட் கிளைக்குச் சென்று கேட்டபோது தான் அவர்கள் அனைவருமே ஏமாற்றப் பட்டிருப்பது தெரிய வந்தது. எப்படியெனில், நகையுடன் வருபவர்களிடம் அவர்கள் பெயரிலேயே அடகு வைத்து, அந்தப் பணத்தை அவர்களிடம் தராமல் அடகு ரசீதை மட்டுமே கொடுத்து விட்டு 6 மாதம் மட்டும் அந்தப் பணத்திற்கு வட்டியும் கொடுத்துள்ளனர். நகையைத் திருப்பிக் கேட்ட போதுதான், பணம் கொடுத்தால் தானே நகையைத் திருப்பித் தர முடியும் என முத்தூட் ஊழியர்கள் கூறியுள்ளனர்.
இவர்கள்மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்ட 20 பேர் மற்றும் அவர்களது உறவினர்கள் எனச் சுமார் 100 க்கும் மேற்பட்டோர் ஊத்துமலையில் உள்ள முத்தூட் அலுலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தகவல் அறிந்து வந்த ஆலங்குளம் டிஎஸ்பி ஜெயபால் பர்ணபாஸ், இன்ஸ்பெக்டர் சுரேஷ் உள்ளிட்டோர் முற்றுகையிட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூஎனக் கூறியதன்றியதன் பேரில் அவர்கள் கலைந்து சென்றனர்.



