
சென்னை:
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள பவன் பள்ளியில், இந்தி ஆசிரியர் ஒருவர் 3-ம் வகுப்பு படிக்கும் மாணவனிடம் இந்தி மொழியில் கவிதை சொல்லுமாறு கேட்டுள்ளார். ஆனால், மாணவனுக்கு இந்தி கவிதை சொல்லத் தெரியவில்லை. இதையடுத்து, ஆசிரியர் மாணவனைப் பல முறை அடித்ததாகவும், அவர் சட்டையைக் கழற்றி அரை நிர்வாணமாக்கியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் பயந்த மாணவன் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்துள்ளார், இதற்காகவும் ஆசிரியர் அவரை அடித்துள்ளார்.
இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து, மாணவனின் பெற்றோர் பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில், பள்ளி நிர்வாகம் பெற்றோருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
இந்தி ஆசிரியையை அழைத்துப் பள்ளி நிர்வாகம் பேச்சு நடத்தியது. அந்தச் சந்திப்பில், ஆசிரியை தனது தவறை உணர்ந்து, பெற்றோரிடம் மன்னிப்பு கேட்கத் தயாராக இருப்பதாகவும், மன்னிப்பு கடிதம் எழுதுவதாகவும் தெரிவித்தார். ஆனால், மாணவனின் பெற்றோர்கள் ஆசிரியையை சந்திக்க விரும்பவில்லை என்றும், கல்வியாண்டு முடியும் வரை அவர் பணியில் தொடரக் கூடாது எனவும் கூறியுள்ளனர். இதற்குப் பிறகு, பள்ளி நிர்வாகம் ஆசிரியை மீது நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன் அடிப்படையில், இந்தி ஆசிரியையை பணி நீக்கம் செய்து, பள்ளி நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
