
சென்னை:
நாடு முழுவதும் தற்போது “மக்கள் மருந்தகம்” என்ற பெயரில் மருந்தகங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு மற்ற தனியார் மருந்தகங்களுடன் ஒப்பிடும்போது, மருந்து மாத்திரைகள் குறைந்த விலையில் கிடைக்கின்றன.
அதே நேரத்தில், தமிழ்நாட்டில் 1000 இடங்களில் குறைந்த விலையில் மருந்து மாத்திரைகள் வழங்கும் “முதல்வர் மருந்தகங்கள்” நாளைத் திறக்கப்பட உள்ளன.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பாண்டிபஜாரில் அமைக்கப்பட்ட முதல்வர் மருந்தகத்தை நாளைக் காலை 10 மணிக்குத் திறந்து, மருந்து விற்பனையைத் தொடங்குகிறார்.
இதற்குப் பிறகு, கோட்டூர்புரம் கலைஞர் நூற்றாண்டு நூல்கத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் 38 மாவட்டங்களில் அமைக்கப்பட்ட முதல்வர் மருந்தகங்களை திறந்து வைத்துச் சிறப்புரையாற்றுகிறார்.
இந்த நிகழ்வில் அமைச்சர் பெரிய கருப்பன் உட்பட பல அமைச்சர்கள், தலைமை செயலாளர் முருகானந்தம் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னெடுக்கும் முயற்சியில், முதல்வர் மருந்தகங்கள் கூட்டுறவு சங்கத்தின் மூலம் 500 மருந்தகங்களும், தொழில்முனைவோர் மூலம் 500 மருந்தகங்களும் திறக்கப்பட உள்ளன.
இதில் சென்னையில் 33 இடங்களில் மருந்தகங்கள் அமைக்கப்படுகின்றன. மதுரையில் 52, கடலூரில் 49, கோவையில் 42, தஞ்சையில் 40 என ஒவ்வொரு மாவட்டத்திலும் மருந்தகங்கள் திறக்கப்படுகின்றன.
முதல்வர் மருந்தகங்களில் ‘ஜெனரிக் மருந்துகள்’, ‘சர்ஜிக்கல்ஸ்’, ‘சித்தா, ஆயுர்வேதம், யுனானி மற்றும் பிற மருந்துகள்’ குறைந்த விலையில் கிடைக்கும்.
மாவட்ட மருந்து சேமிப்பு கிடங்கிலிருந்து மருந்துகள் அனுப்பும் செயல்முறை தற்போது நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் பயன்பெறும் வகையில், வெளிச்சந்தையைவிட 75 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் இங்கு மருந்து மாத்திரைகள் கிடைக்கின்றன.
