
குமரிக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டலச் சுழற்சி காரணமாகத் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்றும் நாளையும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, தேனி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, சிவகங்கை, இராமநாதபுரம், புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, நாமக்கல், கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மே பதினோராம் நாள் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், தேனி, திண்டுக்கல், இராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யக் கூடும் எனத் தெரிவித்துள்ளது.
இன்று காலை எட்டரை மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் அதிக அளவாகத் திருநெல்வேலி மாவட்டம் ஊத்தில் 17 செண்டிமீட்டரும், நாலுமுக்கில் 16 செண்டிமீட்டரும் காக்காச்சியில் 14 செண்டிமீட்டரும், மாஞ்சோலையில் 11 செண்டிமீட்டரும் மழை பதிவாகியுள்ளது.




