
இஸ்லாமியர்களின் நலனைப் பாதிக்கும் மத்திய அரசின் வக்பு திருத்த மசோதாவைத் திரும்பப் பெற வலியுறுத்தித் தமிழ்நாடு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மத்திய அரசு அண்மையில் வக்பு வாரியத் திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் கொண்டுவந்துள்ளது. இந்த நிலையில் அந்த மசோதாவைக் கைவிட வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தித் தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒரு தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்தார்.
அப்போது, இந்தியாவில் மத நல்லிணக்கத்துடன் அனைத்து மதங்களைச் சார்ந்த மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வருவதாகவும், அதற்கு மாறாகச் சிறுபான்மை இஸ்லாமியச் சமுதாய மக்களுக்குக் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில் வக்புச் சட்டத் திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். வக்பு வாரியத் திருத்தச் சட்ட முன்வரைவை முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய அரசைத் தமிழ்நாடு சட்டப்பேரவை வலியுறுத்துவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.



