
புதுடில்லி: ரயில் பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்த 15,000 கோடி ரூபாய் செலவில் 75 லட்சம் A.I ., சிசிடிவி கேமராக்களை நிறுவத் திட்டமிட்டுள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
அவர் நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது:
தொடர் ரயில் விபத்துக்களுக்கு மத்தியில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, மத்திய அரசு ஒரு பெரிய முடிவை எடுத்துள்ளது. ரயில் பாதைகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்படும். சுமார் 15,000 கோடி ரூபாய் செலவில் 75 லட்சம் A.I ., சிசிடிவி கேமராக்களை பெட்டிகள் மற்றும் இன்ஜின்களில் நிறுவ உள்ளோம்.
ஆபத்து நேரத்தில் எச்சரிக்கை
40,000 பெட்டிகள், 14,000 இன்ஜின்களில் கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது. குறிப்பாக, ரயில்களின் முன், பின்புறம் மற்றும் எஞ்சின் பக்கங்களிலும் கேமராக்கள் நிறுவ உள்ளோம். கேமராக்கள் ஆபத்து நேரத்தில் லோகோ பைலட்டை எச்சரிக்கும். ரயில் பாதைகளில் சந்தேகத்திற்கிடமான பொருட்களைக் கண்டறிந்து, எமர்ஜென்சி பிரேக்குகளைப் பயன்படுத்த டிரைவர்களுக்கு எச்சரிக்கும்.
3 மாதங்களில் டெண்டர்!
கேமராக்கள் பொருத்துவதற்கு மூன்று மாதங்களுக்குள் டெண்டர் விடப்படும். அனைத்து ரயில்களுக்கும் பாதுகாப்பு வழங்கப்படும். சில தினங்களாக ரயில்களைக் கவிழ்க்க சதி நடந்து வருவது மிகவும் தீவிரமானது. ரயில்வே நிர்வாகம் பல்வேறு மாநிலங்களின் போலீசாரிடம் ரயில் பாதைகளின் பாதுகாப்பிற்காக விழிப்புணர்வை அதிகரிக்க வலியுறுத்தி உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


