
தமிழகம் முழுவதும் மேற்கொள்ளும் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தின் தொடக்க நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டும் என்று பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டாவுக்கு தமிழ்நாடு மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.
டெல்லி, மோதிலால் நேரு மார்க் பகுதியில் உள்ள பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டாவின் இல்லத்திற்கு தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நேரில் சென்று சந்தித்தார்.
பின்னர் நயினார் நகேந்திரன் செய்தியாளர்களிடம் பேசிய போது, வருகின்ற 6 ஆம் தேதி எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள ஜெ.பி.நட்டா சென்னை வரவுள்ளார்.
இதைத்தொடர்ந்து, அவர் வருகின்ற 7 ஆம் தேதி புதுச்சேரியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார். எனவே அவர், அக்டோபர் 12 ஆம் தேதி மதுரையில் இருந்து தொடங்கும் மக்கள் சந்திப்பு பயணத்தின் தொடக்க விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளேன் என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
மேலும், அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத் தொடக்க நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்ததாகவும் கூறினார்.


