
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நேற்று மாலை 3 மணியளவில் தமிழ்நாடு உள்பட தேசிய அளவில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும், தேசிய மதுவிலக்கு சட்டம் இயற்ற வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் விடுதலை இயக்கத்தின் சார்பில் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு நடைபெற்றது.
இந்த மாநாட்டை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் தலைமை தாங்கி, தொடங்கி வைத்தார். இவருடன் தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தி.மு.க. செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்த நிலையில், நேற்று மாநாடு ஆரம்பித்தவுடனே ஒரு பகுதியில் இளைஞர்கள் அதிகளவு கூடிக்கொண்டு அங்கு அமைக்கப்பட்டுள்ள தடுப்புகளை உடைத்தெறிந்து மாநாட்டு மேடையை நோக்கிச் செல்ல முயன்றனர். அப்போது போலீஸாருக்கும் விசிக நிர்வாகிகளுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்தத் தள்ளு முள்ளில் பெண் காவல்துறை அதிகாரிகள் சிக்கிக் கொண்டு பரிதவித்த நிலையில் இருந்தனர்.
அதுமட்டுமல்லாமல், தடை செய்யப்பட்ட பகுதியில் சென்ற காரை வழிமறித்த பெண் போலீசை விசிகவின் பெண் நிர்வாகிகளும் ஆண் நிர்வாகிகளும் சேர்ந்து இழுத்து தள்ளி அவரைப் பணி செய்ய விடாமல் தடுத்தனர். இது தொடர்பான வீடியோ காட்சி வெளியாகிப் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



