
கடந்த 1976 ம் ஆண்டு ஏப்ரல் 17 ம் தேதி உத்தரப் பிரதேச தொழிற்பகுதி மேம்பாட்டுச் சட்டத்தின் கீழ் New Okhla Industrial Development Authority அதாவது சுருக்கமாக நொய்டா என்ற தொழிற்துறை நகரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த நொய்டா நகரம் மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் இளைய மகன் சஞ்சய் காந்தியின் எண்ணத்தில் உருவானது. அதுவும், நாட்டின் நெருக்கடிக் காலம் அமலில் இருந்த போதுதான், நொய்டாவை உருவாக்கும் எண்ணம் சஞ்சய் காந்தியிடத்தில் தோன்றியது.
மிதமிஞ்சிய மக்கள் தொகையும், தொழிற்சாலைகளும் டெல்லி நகருக்கு மிகுந்த அழுத்தத்தை கொடுப்பதை சஞ்சய் உணர்ந்தார். இதனால், டெல்லி அருகே ஒரு தொழிற்சாலை நகரை கட்டமைப்பது தலைநகரின் பாரத்தை குறைக்கும் என்று கருதினார். அந்த சிந்தயின் விளைவாகவே நொய்டா நகரம் பிறந்தது- 1970களின் பிற்பகுதியிலும் 1980களின் தொடக்கத்திலும் நொய்டா பெரும்பாலும் ஒரு விவசாயப் பகுதியாக இருந்தது.
சிறிய கிராமங்கள் நிறைந்திருந்தன. படிப்படியாக இங்கு பெரிய பெரிய சாலைகள் அமைக்கப்பட்டன. பெரிய கட்டடங்களும் எழுப்பப்பட்டன. தொடர்ந்து, சிறிய சிறிய தொழிற்சாலைகள் நொய்டா நோக்கி வந்தன.நெருக்கடி காலத்தில் சஞ்சய் காந்தி ஒரு வில்லனை போல பார்க்கப்பட்டார். அரசியல் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். பத்திரிகைத் தணிக்கை இருந்தது.
ஆனால், ரயில்கள் சரியான நேரத்தில் இயங்கின. இந்த சமயத்தில்தான் நொய்டா என்று பிரபலமாக அறியப்படும் நொய்டா உருவானது. இங்குதான் மக்களின் கார் என்று அழைக்கப்படும் மாருதி முதன்முதலாக உருவானது. அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டிருந்த காலத்தில் , 1975 டிசம்பர் மாதத்தில் அப்போதைய உத்தரப் பிரதேச முதலமைச்சர் என்.டி. திவாரியை சஞ்சய் காந்தி தனது வீட்டுக்கு அழைத்தார். என்டி.திவாரியுடன் நொய்டா நகரத்தை நிர்மாணிப்பது குறித்து பேசினார். சஞ்சய் காந்தியின் கையில் டெல்லி மேப் இருந்தது.
மேப்பில் கிழக்கு டெல்லியை தீவிரமாக ஆராய்ந்த அவர், அங்கிருந்த குறு மற்றும் சிறு தொழிற்சாலைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று எ.டி. திவாரியிடம் சொன்னார். 3 நாட்களுக்குள் மாற்று இடம் கண்டுபிடித்துவிட்டு என்னிடம் வாருங்கள் என்றும் தெரிவித்து விட்டார். அப்படிதான் நொய்டா கண்டுபிடிக்கப்பட்டது. இந்த இடத்தை பார்வையிட்ட , சஞ்சய் காந்தி அடுத்த இரு நாட்களுக்குள் இங்கு தொழிற்பேட்டை கட்டுமானப்பணிகள் தொடங்க வேண்டுமென்று உத்தரவிட்டார்.
பின்னர், இரு நாட்களில் புல்டோசர்கள் வந்து பணிகள் தொடங்கப்பட்டு விட்டன. தொடர்ந்து, பணிகளையும் அவ்வப்போது சஞ்சய் காந்தி ஆய்வு செய்து வந்தார். பின்னர், பணிகளை மேற்கொள்ள New Okhla Industrial Development Authority என்ற தனி நிறுவனம் உருவாக்கப்பட்டது . இந்த நிறுவனத்துக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரி ஜெகதீஷ் கட்டார் தலைவராக நியமிக்கப்பட்டார். நொய்டா திட்டப்பணிகளுக்கு நிதி ஒதுக்க உத்தரபிரதேச அரசு சுணக்கம் காட்டிய போதெல்லாம், சஞ்சய் காந்தி ஒரு போன்தான் செய்வார்.
பணம் வந்துவிடும். பின்னர், எமர்ஜென்சி முடிந்து ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு, எனக்கு, சஞ்சய் காந்தி, என்டி.திவாரி ஆகியோருக்கு இது, சட்டவிரோதமான செயல் என்று நோட்டீஸ் வந்தது. ஆனாலும், பல தடைகளை தாண்டி நொய்டா இன்று கிரேட்டர் நெய்டாவாக மாறி நிற்கிறது. தற்போது, நொய்டா ஓங்கி வளர்ந்த கட்டடங்களுடன் பிரமாண்ட நகரமாக வளர்ச்சி பெற்றுள்ளது. 10 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். 1997ம் ஆண்டு முதன் முதலில் எல்.ஜி வந்தது… அடுத்து சாம்சங் வந்தது. பின்னர், மைக்ரோசாப்ட், ஹெச்.சி.எல். , அடோப், பார்க்லேஸ் என்று பன்னாட்டு நிறுவனங்களும் வரத் தொடங்கின.
‘ இந்த நகரில் வசிக்கும் மக்களின் ஆண்டு வருமானம் 8 லட்சத்துக்கும் மேல். இந்தியர்களின் சராசரி ஆண்டு வருமான 2.45 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது. உத்தரபிரதேசத்தின் பணக்கார நகரமாக நெய்டா மாறி நிற்கிறது. உத்தரபிரதேசத்தில் மொத்த உற்பத்தியில் 10 சதவிகிதத்தை இந்த நகரம் அளிக்கிறது. ரியல் எஸ்டேட் பிசினசும் இங்கு கொடி கட்டி பறக்கிறது.
சஞ்சய் காந்தியின் எண்ணத்தில் உருவான, நொய்டா நகரம் ஏப்ரல் 17ம் தேதி தனது 50வது பிறந்தநாளை கொண்டாடியது. இந்திராவுக்கு பிறகு, சஞ்சய் காந்திதான் அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
1980ம் ஆண்டு நடந்த விமான விபத்தில் அவர் மறைந்தார். இதையடுத்தே, இந்திராவின் மூத்தமகனான ராஜீக் காந்தி அரசியலுக்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



