
சென்னை: கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது எனச் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை: நேற்று(டிச.,18) குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல சுழற்சியானது இன்று(டிச.,19) லட்சதீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய 7 மாவட்டங்களில் இன்று(டிச.,19) ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை வழக்கத்தைவிட இந்தாண்டு 151 சதவீதம் அதிகம் பெய்துள்ளது.
தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் சில பகுதிகளிலும் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் இன்றும், நாளையும் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



