
பரபரப்பான அரசியல் சூழலில், ஆளுநர் ஆர்.என்.ரவியின் உரையுடன், தமிழக சட்ட சபை நாளை கூடுகிறது. ஒவ்வொரு ஆண்டும் தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்குவது மரபாக இருந்து வருகிறது. அந்த வகையில், 2026-ஆம் ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் நாளை காலை 9.30 மணிக்கு கூடுகிறது. இதில் பங்கேற்று உரையாற்றுவதற்காக ஆளுநர் ஆர்.என்.ரவி காலை 9.10 மணிக்கு ஆளுநர் மாளிகையான லோக் பவனிலிருந்து காரில் புறப்படுகிறார்.
காலை 9.25 மணிக்கு தலைமைச்செயலகம் வரும் அவருக்கு பேண்டு வாத்தியம் முழங்க, காவல்துறையின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து, ஆளுநர் ஆர்.என்.ரவியை, சபாநாயகர் மு.அப்பாவு சால்வை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து வரவேற்று அழைத்து செல்கிறார். சட்டசபை கூட்ட அரங்கத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வந்ததும், சபாநாயகரின் இருக்கைக்கு செல்வார். அவருடைய வலதுபுறம் சபாநாயகரும், இடது புறம் ஆளுநரின் செயலாளரும் அமரும் வகையில் இருக்கை போடப்பட்டுள்ளது.
சரியாக, காலை 9.30 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டதும், ஆளுநர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்த தொடங்குவார். அவரது உரையில் தமிழக அரசின் செயல்பாடுகள், கொள்கை, சாதனைகள் இடம்பெற்றிருக்கும். கவர்னர் ஆங்கிலத்தில் உரை நிகழ்த்தி முடித்ததும், அந்த உரையை தமிழில் சபாநாயகர் அப்பாவு வாசிப்பார்.
அத்துடன் அன்றைய கூட்டம் நிறைவடைகிறது. அதனைத் தொடர்ந்து, அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தை, எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து விவாதித்து முடிவெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



