Uvari: அடிவேரிலிருந்து தோன்றிய சுயம்புலிங்க சுவாமி !

Advertisements

அடிவேரிலிருந்து தோன்றிய சுயம்புலிங்க சுவாமி !

உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலுக்கு வந்து கடற்கரையில் நீராடிச் சுயம்புலிங்க சுவாமியை மனமுருக வழிபடுவதாலும், எந்த நோயாக இருந்தாலும் 41 நாட்கள் கடலில் நீராடிச் சுயம்புலிங்க நாதரை தொழுதால் தீர்ந்துவிடும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

அந்தக்காலத்தில் பால், மோர், தயிர் ஆகியவற்றை பானைகளில் வைத்து, ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கி, தலையில் சுமந்தபடி விற்று வந்தனர் யாதவ குல மக்கள். அவர்களில் ஒரு மூதாட்டி, ஒருநாள் அந்தக் கடம்பமர வேருக்கு அருகில் அமர்ந்து, அழுதுகொண்டிருந்தாள். ‘என்ன பொழப்பு இது! தினமும் பானைகளைச் சுமந்துக்கிட்டு, விக்கிறதுக்குக் கிளம்பினா, கடம்பவேர் தடுக்கி விழுந்து, பானை உடைஞ்சு, பாலும் மோரும் தரையில ஆறாட்டம் ஓடுறதே வேலையாப் போச்சு! காலம் போன காலத்துல கண்ணும் தெரியலை, மண்ணும் தெரியலை எனக்கு!’ என்று புலம்பினாள். வெறுங்கையுடன் வீடு திரும்பினாள்.

விவரம் அறிந்து ஆவேசமான அவளின் கணவர், அந்தக் கடம்ப மரம் அருகில் வந்தார். ‘உன்னோட அடிவேர் கூட இருக்கக் கூடாது! இதோ… உன்னை அழிக்கிறேன், பார்’ என்று அரிவாளால் அடிவேர்ப் பகுதியில் வெட்டினார். அவ்வளவுதான்… அங்கிருந்து குபுக்கென்று கிளம்பி, பீறிட்டு அடித்தது ரத்தம். இதில் அரண்டு போனவர், தலைதெறிக்க ஓடி, ஊர்ப் பெரியவரிடம் விவரத்தைத் தெரிவித்தார். பீதியுடன் ஊரே திரண்டது.

அப்போது ஊர்ப் பெரியவருக்கு அருள்வாக்கு வந்தது. ‘வந்திருக்கறது சிவன். லிங்கமா, சுயம்புவா நமக்காக வந்திருக்காரு. உடனே சந்தனத்தை அரைச்சு, ரத்தம் வர்ற இடத்துல தடவுங்க. சரியாயிடும்!’ என்று சொல்லி, தென்னையும் பனையும் சூழ்ந்த இடத்தில், சந்தன மரத்தையும் காட்டியருளினார். பிறகு, சந்தனம் அரைத்துப் பூசியதும், ரத்தம் வழிவது நின்றது. அதையடுத்து அங்கேயே சிறிய கூரை வேய்ந்து, கோயிலாக்கி வழிபடத் துவங்கினார்கள்! அந்த ஊர்ப் பெரியவரே கோயிலின் தர்மகர்த்தாவாக இருந்து, கோயிலை வளரச் செய்தார். பிறகு, மண்டபம் கட்டி, சந்நிதி அமைத்து, ஆலயம் உருவானதாம்!

உவரி சுயம்புலிங்க சுவாமி:

நெல்லை மாவட்டத்தில் தூத்துக்குடி&கன்னியாகுமரி சாலையில் தூத்துக்குடியிலிருந்து சுமார் 80 கிலோ மீட்டர் தொலைவிலும், திருச்செந்தூரிலிருந்து சுமார் 38 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகர்கோவிலிலிருந்து சுமார் 60 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது உவரி ஸ்ரீசுயம்புலிங்க சுவாமி கோவில்.

உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலைக் குல தெய்வமாகக் கொண்டுள்ள லட்சக்கணக்கான மக்கள் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் உவரிக்கு வந்து வழிபாடுகள் செய்வதை வழக்கத்தில் வைத்துள்ளனர். குடும்பத்திலும், தொழிலிலும் மேன்மையைத் தருவதாக இந்தக் குல தெய்வ வழிபாடு அமைந்துள்ளது. பங்குனியில் குல தெய்வத்தை உவரிக்கு வந்து வழிபட்டால் தான் மனதில் நிம்மதி பிறக்கும் என்று லட்சோப லட்சம் குடும்பத்தினர் நம்புகிறார்கள். இதனால் பங்குனி மாதம் முழுவதும் உவரியில் பக்தர்கள் கூட்டம் அலை மோதும்.


இக்கோவிலுக்கு வந்து கடற்கரையில் நீராடிச் சுயம்புலிங்க சுவாமியை மனமுருக வழிபடுவதாலும், இந்த ஊற்று நீரை பருகுவதாலும் தீராத வயிற்று வலியால் அவதிப்படுபவர்கள் மற்றும் மனநிலை சம்பந்தமான நோய்களைக் கொண்டவர்களின் நோய் பாதிப்புகள் நீங்குவதாகவும், துஷ்ட சக்திகளின் பாதிப்புகள், கிரக தோஷங்கள் போன்றவை நீங்கி வாழ்க்கை நிலை மேம்படுவதாகவும், குழந்தை இல்லாதவர்களுக்குக் குழந்தை வரம் கிடைப்பதாகவும் அனுபவம் வாய்ந்தவர்களின் வாக்காக இருக்கிறது.

எந்த நோயாக இருந்தாலும் 41 நாட்கள் கடலில் நீராடிச் சுயம்புலிங்க நாதரை தொழுதால் தீர்ந்துவிடும். நொண்டி, கூன், குருடு உள்ளிட்ட பிரச்சினைகளும் இவரை வழிபட்டால் தீருகிறது. கல்யாண வரம் வேண்டி வருவோருக்கு உடனடியாகத் திருமணம் நடைபெறும்.


இந்தக் கோயிலில் சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார். ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் முழுவதும் 7 மணிக்குச் சூரிய ஒளி இறைவன் மீது விழுகிறது. கடல் ஓரத்தில் உள்ள 4 ஊற்றுகள் அனைத்தும் நல்ல தண்ணீர் ஊற்றுகள். சுவாமியின் அபிஷேக தண்ணீர் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *