
சூர்யா சிவா கட்சி பதவியில் தொடரலாம் என்று பாஜக தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தல்!
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சூர்யா சிவாவுக்கும், டெய்சிக்கும் இடையேயான தொலைபேசி உரையாடல் வெளியாகி கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.
சென்னை: திமுக மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் 8 ஆம் தேதி பாஜகவில் இணைந்தார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்த அவர் திமுகவையும், முதலமைச்சர் முக ஸ்டாலினை, தனது தந்தை திருச்சி சிவாவையும் கடுமையாக விமர்சித்து வந்தார். கட்சியில் சேர்ந்த ஒரே மாதத்தில், பாஜக மாநில இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சூர்யா சிவாவுக்கும், டெய்சிக்கும் இடையேயான தொலைபேசி உரையாடல் வெளியாகி கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. டெய்சியை தரக்குறைவான வார்த்தைகளை கொண்டு திட்டிய திருச்சி சூர்யா, அவருக்கு கொலை மிரட்டலும் விடுத்தார். அதை தொடர்ந்து சூர்யா சிவாவை கட்சியில் இருந்து 6 மாதம் அண்ணாமலை சஸ்பெண்ட் செய்தார். ஆனால் ஓராண்டு ஆகியும் கட்சி பதவியில் மீண்டும் சூர்யா சிவா சேர்க்கப்படாமல் இருந்தார். இதற்கிடையே, சூர்யா சிவா அதிமுகவில் இணைய உள்ளதாக தகவல் பரவியது. இந்த நிலையில், சூர்யா சிவா கட்சி பதவியில் தொடரலாம் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தியுள்ளார்.
அறிவிக்கை
திரு.சூர்யாசிவா அவர்கள் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்பட்டதால், ஒழுங்கு நடவடிக்கை குழுவானது விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பித்ததின் அடைப்படையில் 24.11.2022 முதல் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் 6 மாத காலத்திற்கு நீக்கம் செய்யப்பட்டிருந்தார்.
அவருடைய… pic.twitter.com/YT6rylJhtK
— BJP Tamilnadu (@BJP4TamilNadu) November 2, 2023


