
திருச்சூர்: கேரள மாநிலம் திருச்சூர் தொகுதியில் பாஜக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள மலையாள நடிகர் சுரேஷ் கோபி, பிரச்சாரத்துக்குச் சென்றபோது வாக்காளர்களால் அவமானப் படுத்தப்பட்டு இருக்கிறார்.
தமிழ்நாட்டை பொறுத்தவரையில் நடிகர் நடிகைகளை ஏதோ “அவதார புருஷர்”களைபோல் பாவித்து வருகிறார்கள். அதனால்தான் தமிழ்நாட்டில் நடிகர்கள் அரசியலுக்கு வந்து நாடாள்வது என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது.
ஆனால் நமது அண்டை மாநிலமான கேரளாவில் நடிகர்களும் சாதாரண மனிதர்களைப் போன்றவர்கள்தான். அவர்களுக்கு யாரும் தனி மரியாதை கொடுப்பதில்லை. அதை நிரூபிக்கும் வகையில் நடந்திருக்கும் இந்த நிகழ்வுபற்றிய விவரம் வருமாறு;-
பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்ததில் இருந்தே அவர் தொடர்பான பரபரப்புகளுக்கு பஞ்சம் இல்லை.
இந்த நிலையில், வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் சுரேஷ் கோபி திருச்சியில் தொகுதி வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருக்கிறார். இதனால் அவர் தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.
அதன்படி ஒரு கிராமத்திற்கு வாக்கு சேகரிப்பதற்காக அவர் சென்றிருந்தார். அப்போது அங்கு இருந்த மக்களைப் பார்த்து,” நான் இப்போது உங்களிடம் வாக்கு கேட்பதற்காக வரவில்லை. நீங்கள்முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சியில் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா? அப்படி நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தால் எனக்கு நீங்கள் ஓட்டு போட வேண்டாம் …சொல்லுங்கள். நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா?” எனக் கேட்டார்.
அதற்கு அங்கிருந்த மக்கள், ஒரே குரலில் “நாங்கள் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறோம். நீங்கள் போயிட்டு வாங்க” என உரக்க கூறினார்கள். இது சுரேஷ் கோபிக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது. அதன் பின் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்த அவர், சிறிது நேரத்தில் அங்கிருந்து ஏமாற்றத்துடன் புறப்பட்டுச் சென்று விட்டார்.

