Delhi: 1,000 பெண்களை ‘ட்ரோன் பைலட்’ ஆக மாற்றிய ‘நமோ ட்ரோன் தீதி’ திட்டம்!

Advertisements

புதுடெல்லி:மத்திய அரசின் ‘நமோ நீதி யோஜனா: திட்டத்தின் கீழ், ஆயிரம் பெண்கள் ‘ட்ரோன் பைலட்’டாக மாற்றப்பட்டு உள்ளனர்.

மத்திய அரசு சார்பில் கடந்த 2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் தீதி யோஜனா’ திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின்படி 5 ஆண்டுகளில் ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன்களை இயக்குவது தொடர்பாகப் பயிற்சி அளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

‘நமோ ட்ரோன் தீதி யோஜனா’ திட்டத்தின் ஒரு பகுதியாக டெல்லியில் நேற்று நடைபெற்ற “வலிமையான பெண்கள்-வளர்ச்சியடைந்த பாரதம்” நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது வேளாண் பணிகளுக்காக மகளிர் சுய உதவிக் குழுக்களைசேர்ந்த 1,000 பெண்களுக்கு ட்ரோன்களை அவர் வழங்கினார்.

இந்த ட்ரோன்கள் மூலம் வயல்களில் விதைகளைத் தூவ முடியும். பூச்சிக்கொல்லி, உரத்தைப் பயிர்கள் மீது தெளிக்க முடியும். இந்தவிழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:-

” மத்திய அரசின் பல்வேறு திட்டங்களால் நாடு முழுவதும் ஒரு கோடி பெண்கள் லட்சாதிபதிகளாக உருவெடுத்துள்ளனர். இந்த எண்ணிக்கையை 3 கோடியாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.பெண்களின் நலனுக்காகத் தூய்மை இந்தியா திட்டத்தில் நாடு முழுவதும் கழிப்பறைகள் கட்டிக் கொடுக்கப்பட்டு உள்ளன.

செங்கோட்டையில் பெண்களுக்கான நலத்திட்டங்களை நான் அறிவித்தபோது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஏளனம் செய்தன. ஆனால் கழிப்பறை, இலவச சமையல் காஸ், வங்கிக் கணக்கு உள்ளிட்ட திட்டங்களால் கோடிக்கணக்கான பெண்கள் கவுரவமாக வாழ்க்கையை நடத்துகின்றனர்.

மகப்பேறு விடுப்பை 26 வாரங்களாக அதிகரித்துள்ளோம். கர்ப்பிணிகளுக்கு ரூ.6,000 நிதியுதவி வழங்கப்படுகிறது. முத்ரா யோஜ்னாதிட்டத்தில் பெண்கள் தொழில் தொடங்க கடன் உதவி வழங்கப்படுகிறது. விண்வெளி, தகவல் தொழில்நுட்பத்தில் இந்திய பெண்கள் சாதனை படைத்து வருகின்றனர். அதிக பெண் விமானிகளைக் கொண்ட நாடு என்ற பெருமையைப் பெற்றுள்ளோம்.

மத்திய அரசின் ‘நமோ ட்ரோன் தீதி யோஜனா’ திட்டத்தில் ஆயிரம் பெண்கள் இப்போது ட்ரோன் பைலட்டுகளாக உருவெடுத்துள்ளனர். மகளிர் சுய உதவிக் குழுக்களில் 10 கோடிக்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளனர். ஒவ்வொரு சுயஉதவிக் குழுக்களுக்கும் தலா ரூ.20 லட்சம்வரை நிதியுதவி வழங்கப்படுகிறது.

பிரதமரின் சூரிய வீடு மின்சார திட்டத்தின் கீழ் வீடுகளில் சூரிய மின் தகடுகளைப் பொருத்தும் திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தத் திட்டத்தில் பெண்கள் அதிகளவில் விண்ணப்பிக்க வேண்டுகிறேன். இதன் மூலம் உங்களது மின் கட்டணம் பூஜ்ஜியமாக மாறும்”.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *