
உச்சநீதிமன்றம், புது டெல்லி: தேர்தல் ஆணையர்கள் நியமனத்துக்கு உடனடியாகத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்த வழக்குமீதான விசாரணை மார்ச் 21ம் தேதி நடைபெறும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நேற்று தான் மத்திய அரசு ஞானேஷ் குமார் மற்றும் பல்விந்தர் சந்து ஆகிய இருவரையும் தேர்தல் ஆணையர்களாக நியமித்துள்ளது. புதிய சட்டத்தின் கீழ் செய்யப்பட்ட இந்த நியமனத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை நீதிபதி சஞ்சீவ் கண்ணா, நீதிபதி தீபங்கர் தத்தா, ஏஜி மசிஹ் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.
என்ன விசயம்?
கடந்த ஆண்டு இயற்றப்பட்ட தேர்தல் ஆணையர்கள் சட்டம், 2023 இன் கீழ் மத்திய அரசாங்கம் இரண்டு தேர்தல் ஆணையர்களை நியமித்துள்ளது.
இந்தச் சட்டத்தின் மூலம் தேர்தல் ஆணையர்களை நியமிப்பதற்காக அமைக்கப்பட்ட குழுவில் மத்திய அரசு மாற்றங்களைச் செய்தது.
முன்னதாக, இந்தக் குழுவில் இந்திய தலைமை நீதிபதியும் (சிஜேஐ) இருந்தார். அவருக்குப் பதிலாக ஒரு கேபினட் அமைச்சர் நியமிக்கப்பட்டு புதிய சட்டம் இயற்றப்பட்டது. தேர்தல் ஆணையர்களை நியமிப்பதற்கான குழுவிலிருந்து தலைமை நீதிபதி நீக்கப்பட்டது தொடர்பாகப் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.
இந்தச் சட்டத்தைஉடனடியாகத் தடை செய்ய நீதிமன்றம் மறுப்பு
இந்த ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் தாக்கல் செய்யப்பட தனித்தனியான மனுக்கள்மீது, தலைமை தேர்தல் ஆணையர் (சிஇசி) மற்றும் தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான புதிய சட்டத்தை உடனடியாக அமல்படுத்த தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இது சட்டப்பூர்வ விதி என்பதால் தடை விதிக்க மாட்டோம் என்று நீதிமன்றம் கூறியிருந்தது. அதேநேரத்தில் மத்திய அரசு மற்றும் தேர்தல் ஆணையத்துக்கு, இது சம்பந்தமாக நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் ஒப்புக்கொண்டது.
நேற்று இந்திய தேர்தல் ஆணையத்தின் உயர்மட்ட குழுவில் காலியாக உள்ள இரண்டு பதவிகளுக்குச் சுக்பீர் சிங் சந்து மற்றும் ஞானேஷ் குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இன்று அவர்கள் பதவி ஏற்றுக்கொண்டார்கள்.
2 புதிய தேர்தல் ஆணையர்கள் யார்?
ஞானேஷ் குமார் 1988 பேட்ச் இந்திய நிர்வாகச் சேவை (IAS) கேரள கேடரின் அதிகாரி ஆவார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட்டுறவு அமைச்சகத்தின் செயலாளர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றார். உள்துறை அமைச்சகத்தில் காஷ்மீர் பிரிவின் இணைச் செயலாளராக இருந்தார்.
சுக்பீர் சிங் சாந்து உத்தரகாண்ட் கேடரின் 1988 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். ஜூலை, 2021 இல் ஓம் பிரகாஷுக்குப் பதிலாக உத்தரகாண்டின் புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். உயர்கல்வித்துறையிலும் பணிபுரிந்துள்ளார். இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் தலைவர் உட்பட முக்கிய அரசுப் பதவிகளை வகித்துள்ளார்.
மக்களவை தேர்தல் தேதிகள் நாளை அறிவிக்கப்படும்
தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பான சர்ச்சைக்கு மத்தியில் மக்களவை தேர்தல் தேதியைத் தேர்தல் ஆணையம் நாளை (மார்ச் 16) பிற்பகல் 3 மணிக்குச் செய்தியாளர் சந்திப்பை நடத்தி தேர்தல் தொடர்பான தகவல்களை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவிக்கவுள்ளது.
4 மாநிலங்களுக்குச் சட்டசபை தேர்தல் தேதியும் அறிவிக்கப்படலாம்
மக்களவை தேர்தலுடன், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் 4 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இந்த மாநிலங்களில் அருணாச்சல பிரதேசம், ஆந்திரா, ஒடிசா மற்றும் சிக்கிம் ஆகியவை அடங்கும்.
மக்களவை தேர்தல் முடிவுகள் மே மாதம் வெளியாகும்
நாட்டில் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறலாம் எனவும், தேர்தல் முடிவுகள் மே மாதம் அறிவிக்கப்படலாமென ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

