
2 பேர் கொல்லப்பட்ட வழக்கில் முன்னாள் எம்.பி. குற்றவாளியெனச் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது…
பாட்னா:பீகார் மாநிலம் மகாராஜ்கஞ்ச் தொகுதி முன்னாள் எம்.பி. பிரகுநாத் சிங். ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த இவர்மீது இரட்டை கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
1995ம் ஆண்டு மார்ச் மாதம் அம்மாநிலத்தின் சரண் மாவட்டம் ஷப்ரா பகுதியில் நடந்த சட்டமன்ற தேர்தலின்போது வாக்காளர்கள் 2 பேரைக் கொலை செய்ததாகப் பிரகுநாத் சிங் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
தேர்தலில் தனக்கு எதிராக ஓட்டுப்போட்டதால் ஆத்திரமடைந்த பிரகுநாத் வாக்காளர்கள் 2 பேரைக் கொலை செய்துள்ளார். இந்த வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், இந்த இரட்டை கொலை வழக்கில் பிரகுநாத் சிங் குற்றவாளி என்று சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பளித்தது. கொலை வழக்கில் ஆதாரங்களை அழிக்கவும் பிரகுநாத் சிங் முயற்சித்ததாகச் சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது.
மேலும், இரட்டை கொலை வழக்கில் குற்றவாளியெனத் தீர்ப்பளித்துப் பிரகுநாத் சிங்கிற்கு ஆயுள் தண்டனை விதித்து சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
உயிரிழந்த 2 பேரின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் பீகார் அரசுக்குச் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.




