
வரும் ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது.
மும்பை: 10 அணிகள் கலந்து கொண்டுள்ள ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களில் உள்ளன.
இந்தத் தொடரில் கொல்கத்தா அணிக்குத் தொடக்க ஆட்டக்காரராகக் களம் இறங்கி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் வெஸ்ட் இண்டீஸ் வீரர் சுனில் நரேனை வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாடக் கோரி அந்த அணியின் கேப்டன் ரோவ்மன் பவல் கேட்டுக்கொண்டார்.
இதன் காரணமாகச் சுனில் நரேன் ஓய்விலிருந்து வந்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக டி20 உலகக்கோப்பையில் விளையாட வாய்ப்பு உள்ளதாகத் தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில், எதிர்வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடப்போவதில்லையெனச் சுனில் நரேன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது, எதிர்வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாட வேண்டும் என அழைப்புகள் வந்தன. நான் ஓய்விலிருந்து திரும்ப வந்து டி20 உலகக்கோப்பையில் ஆட வேண்டும் எனச் சிலர் சொல்கிறார்கள். ஆனால் அந்தக் கதவை நான் ஏற்கனவே மூடிவிட்டேன். வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்களைத் தொடர்ந்து ஆதரிப்பேன். அவர்கள் கோப்பையை வெல்ல வாழ்த்துகள். இவ்வாறு அவர் கூறினார்.


