
கோவையில் தனியார் மொபைல் ஆப்-ஐ நம்பி அதில் முதலீடு செய்த கல்லூரி மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டம் அரூரைச் சேர்ந்தவர் அப்துல் ரபீக் (வயது 20). இவர் மலுமிச்சம்பட்டி அருகே உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக்-ஐ.டி., மூன்றாமாண்டு படித்து வந்தார்.
நேற்று காலை வழக்கம்போல் கல்லூரிக்குச் சென்ற அப்துல், தனது நண்பர்களிடம் தனக்கு வயிற்று வலி இருப்பதாகக் கூறிவிட்டு விடுதிக்குச் சென்றார். தொடர்ந்து அப்துலின் நண்பர்கள் மதியம் உணவு சாப்பிடுவதற்காக விடுதிக்குச் சென்றுள்ளனர்.
அங்கு மாணவரின் அறை உள்பக்கமாகத் தாளிடப்பட்டிருந்தது. மாணவர்கள் கதவைத் தட்டியும் அப்துல் கதவைத் திறக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த மாணவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அப்துல் இடது கையில் பிளேடால் அறுத்துக்கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருந்தார்.
இதனைப்பார்த்த அவரது நணபர்க கதறி அழுதனர். தொடர்ந்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில் போலீசார் அப்துலின் உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் அந்த மாணவர் நண்பர்களிடம் கடன் வாங்கி வி.ஐ.பி என்ற மொபைல் ஆப் மூலம் ரூ.84,000 முதலீடு செய்ததும், கட்டிய பணத்திற்கான லாபத் தொகையையும், முதலீடு செய்த பணத்தையும் அந்த நிறுவனத்தினர் திருப்பிக் கொடுக்காததும் தெரியவந்தது.
தொடர்ந்து அப்துல், “உடனடியாகப் பணத்தைத் தராவிட்டால் என்ன முடிவு வேண்டுமானாலும் எடுப்பேன்” என்று அந்த நிறுவனத்திற்குச் செய்தி அனுப்பியதும் தெரியவந்துள்ளது.போலீசார் தொடர்ந்து இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


