
வேறொரு திருமணம் செய்து கொண்ட தனது கணவர்மீது நடவடிக்கை எடுத்து வீடும் சொத்தும் வழங்க வேண்டிப் பாதிக்கப்பட்ட மாற்று திறனாளி ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்கு முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் கருப்பூர் அருகே அகராதிபட்டினம் பகுதியைச் சேர்ந்த வள்ளி 47.அவரது மகன் உமாபதி 30 ஆகியோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர்.அப்போது மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய் கேனை எடுத்துத் தலையில் ஊற்றி இருவரும் தீக்குளிக்க முயற்சி செய்தனர்.பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் உடனடியாகத் தடுத்து நிறுத்தி அவர்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட வள்ளி கூறும்போது எனக்கும் அதே பகுதியைச் சேர்ந்த செல்வம் என்பவருக்கும் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.தற்போது 30 வயதில் மகன் உள்ளார்.திருமணமாகி ஒரு ஆண்டில் நான் மாற்று திறனாளி என்ற காரணத்தைச் சொல்லி என்னை விட்டுப் பிரிந்து வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். நானும் எனது மகனும் மாற்றுத்திறனாளியாக இருப்பதால் எங்கும் வேலை செய்ய முடியாத சூழ்நிலை உள்ளது.
வாழ்வாதாரத்திற்கு பணம் இல்லாமல் தவித்து வரும் எனக்கு எந்தத் தொகையும் இல்லாமல் சாப்பாட்டிற்கு கஷ்டப்பட்டு வருகிறேன்.கணவரிடம் சென்று எங்களின் வாழ்வாதாரத்திற்கு பணமும், தங்குவதற்கு வீடு கேட்டதற்கு தர முடியாது எனக் கொலை மிரட்டல் விடுத்தார்.இதுகுறித்து கருப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் கருப்பூர் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை.
எங்கு முறையிடுவது எனத் தெரியாமல் இறந்து விடலாமென நினைத்து இங்குத் தீக்குளிக்க முயற்சி செய்தேன்.எனவே மாவட்ட நிர்வாகம் எங்கள்மீது கருணை காட்டி நடவடிக்கை எடுத்து எனது கணவரிடமிருந்து தங்குவதற்கு வீடும், வாழ்வாதாரத்திற்கு பணமும் வாங்கித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.காவல்துறையினர் இருவரையும் டவுன் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

