
கரீபியன் தீவு கடலில் இன்று காலைச் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 7.6 ஆகப் பதிவாகி உள்ளது.
ஹோண்டுராஸ் வடக்கில் உள்ள கேமன் தீவுகளின் கடற்கரையிலிருந்து சுமார் 209 கிலோமீட்டர்கள் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் 10 கிலோமீட்டர்கள் ஆழத்தில் ஏற்பட்டது.
நிலநடுக்கம் தொடர்பான விவரங்களை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அந்தப் பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
நிலநடுக்கம் காரணமாக அமெரிக்க அட்லாண்டிக் அல்லது வளைகுடா கடற்கரைகளுக்குச் சுனாமி எச்சரிக்கை எதுவும் இல்லை.
எனினும், போர்ட்டோ ரிக்கோ மற்றும் விர்ஜின் தீவுகளுக்குச் சுனாமி எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பான அறிவிக்கையில், கேமன் தீவுகள், ஜமைக்கா, கியூபா, மெக்சிகோ, ஹோண்டுராஸ், பகாமாஸ், பெலிஸ், ஹைட்டி, கோஸ்டா ரிகா, பனாமா, நிகரகுவா மற்றும் குவாத்தமாலா ஆகிய நாடுகளின் கடற்கரைகளில் மையப்பகுதியிலிருந்து 620 மைல்களுக்குள் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட “அபாயகரமான சுனாமி அலைகள்” ஏற்பட வாய்ப்புள்ளதாகப் பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.
