
சென்னையில் வசிக்கும் வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் விநாயகர் சதுர்த்தி, ரம்ஜான், கிறிஸ்துமஸ், தீபாவளி, பொங்கல், ஆயுத பூஜை உள்ளிட்ட பண்டிகை காலங்களில் தங்களின் சொந்த ஊர்களுக்குப் பயணம் மேற்கொள்வார்கள். அவ்வாறு செல்லும்போது கடுமையான கூட்ட நெரிசலில் சிக்கித் தவிப்பர்.
இந்த நிலையில், தீபாவளி பண்டிகையை யொட்டி பயணிகளின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக, நாடு முழுவதும் 7,000 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என்று மத்திய ரெயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
அதன்படி சென்னை தாம்பரத்திலிருந்து நாகர்கோவிலுக்கு இன்று சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
இந்தச் சிறப்பு ரெயில், இன்று மதியம் 3.45 மணிக்குப் புறப்பட்டு விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி மதுரை, நெல்லைஆகிய ரயில் நிலையங்களின் சந்திப்பு வழியாக நாளைக் காலை 4.40க்கு நாகர்கோவில் சென்றடைகிறது.
தொடர்ந்து இந்த ரெயில் மறுமார்க்கமாக நாளைக் காலை 8.45க்கு புறப்பட்டு இரவு 9.55க்கு தாம்பரம் வந்தடைகிறது.
இதே போல், தாம்பரத்திலிருந்து மாலை 5 மணிக்குப் புறப்படும் மற்றொரு சிறப்பு ரெயில், விழுப்புரம், கடலூர், சிதம்பரம், திருவாரூர், காரைக்குடி, சிவகங்கை வழியாகக் காலை 3.45க்கு மானாமதுரை சென்றடைய உள்ளது. பின்னர் மறுமார்க்கமாக இந்த ரயில் நாளைக் காலை 11.45க்கு புறப்பட்டு இரவு 11.10க்கு தாம்பரம் வந்தடைய உள்ளது.


