
எண்ணூரில் எண்ணெய் கழிவு பகுதிகளை சவுமியா அன்புமணி பார்வையிட்டு அப்பகுதி மீனவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
மிக்ஜாங் புயல் காரணமாக பெய்த கனமழையினால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின்போது எண்ணூர் கடல்பகுதியில் எண்ணெய் கழிவு கலந்தது. இதனால் மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
வீடுகளிலும் எண்ணெய் படலம் படர்ந்து பொது மக்களுக்கு பல்வேறு உடல் ரீதியான பிரச்சினையும் ஏற்பட்டது. எண்ணூர் முகத்துவார பகுதி மற்றும் கடலில் தேங்கி உள்ள எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த பகுதிகளை பல்வேறு அரசியல் தலைவர்கள் சென்று பார்வையிட்டு எண்ணெய் நிறுவனத்துக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். மேலும் பாதிப்பு குறித்து மத்திய எண்ணெய் வள மேம்பாட்டுக் குழுவும் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பித்தது. மக்கள் நீதி மையம் கட்சியின் நிறுவனர் கமலஹாசன் கூட பாதிக்கப்பட்ட இடத்திற்கு வந்து மீனவர்கள் கழிவுகள் அகற்றும் பணியில் ஈடுபடுவதை கண்டித்தார்.
இந்த நிலையில் பசுமை தாயகம் தலைவர் சவுமியா அன்புமணி இன்று காலை எண்ணூரில் எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் பார்வையிட்டார். அவர் எண்ணூர் சிவன் படை குப்பம், கமலாம்பாள் நகர் பகுதிகளில் எண்ணெய் கழிவு கலந்த இடத்தில் பாதிப்புகள் குறித்து மீனவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

