
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே நேற்று நள்ளிரவு முன்விரோதம் காரணமாக அண்ணன், தம்பி இருவரும் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிவகங்கை அருகே கொல்லங்குடி கல்லணை என்ற பகுதியில் நேற்று நள்ளிரவு எட்டு பேர் கொண்ட கும்பல் மதுரை மாவட்டம், வாடிப்பட்டி தாலுகா, நாச்சிகுளம் ஆண்டிச்சாமி மகன்கள் சுபாஷ், ஜெயசூர்யா ஆகிய இருவரை கொலை செய்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காளையார்கோவில் போலீசார் உடலைச் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உயிரிழந்த இருவரும் அண்ணன், தம்பிகள். இவர்கள்மீது சோழவந்தான் காவல் நிலையத்தில் கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதனைத் தொடர்ந்து கடந்த சில வருடங்களாக இவர்கள் இருவரும் சிவகங்கையில் உள்ள தனியார் உணவகத்தில் வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று நள்ளிரவு மூன்று இரு சக்கர வாகனத்தில் காளையார்கோவில் அருகே கொல்லங்குடி பகுதியில் உள்ள தைலமரக் காட்டுக்குள் இருந்த சுபாஷ், ஜெயசூர்யா மற்றும் 3 நண்பர்களையம் முன் விரோதத்தால் பயங்கர ஆயுதங்களால் அண்ணன் தம்பி சுபாஷ், ஜெயசூர்யா ஆகிய இருவரை வெட்டிக் கொலை செய்து விட்டு மற்ற மூன்றுபேரை வெட்ட முற்படும்பொழுது தப்பி ஓடி உள்ளனர்.
கொலை சம்பவம் தொடர்பாகத் தப்பி ஓடிய ராஜேஷ், நவீன், ஆகியோர் காளையார்கோவில் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்ததன் அடிப்படையில் காளையார்கோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலைக் கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர். அண்ணன், தம்பி இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

