
பிரபல பின்னணி பாடகர் வேல்முருகன் குடித்துவிட்டு மதுபோதையில் மெட்ரோ ரயில் உதவி மேலாளரைத் தாக்கியதால் அவரைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்து உள்ளனர்.
நாட்டுப்புற பாடல்கள் பாடுவதில் வல்லவரான வேல்முருகன், சசிகுமார் இயக்கத்தில் வெளிவந்த சுப்ரமணியபுரம் திரைப்படம் இடம்பெற்ற மதுர குலுங்க குலுங்க பாடல்மூலம் பின்னணி பாடகராக அறிமுகமானார். அப்பாடல் இன்றளவும் கோவில் திருவிழாக்களில் தவறாமல் இடம்பெற்று வருகிறது. அதற்கு முக்கிய காரணம் வேல்முருகனின் குரல் தான். இதையடுத்து நாடோடிகள், ஆடுகள்ம், காஞ்சனா போன்ற படங்களில் இவர் பாடிய பாடல்கள் வேறலெவல் ஹிட் அடித்தன.
ஒரு சில ஆண்டுகள் உச்சத்தில் இருந்த வேல்முருகனுக்கு படிப்படியாகப் படவாய்ப்புகள் குறையத் தொடங்கியதை அடுத்து அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகக் களமிறங்கினார். அந்நிகழ்ச்சி மூலம் மீண்டு புகழ் வெளிச்சம் கிடைத்ததை அடுத்து பிக்பாஸ் ஜோடிகள் என்கிற நடன நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். பின்னர் மிஸ்டர் அண்ட் மிஸ்சஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் தனது மனைவியுடன் ஜோடியாக வந்து கலந்துகொண்டார் வேல்முருகன்.
இந்த நிலையில் சென்னையில் உள்ள விருகம்பாக்கம் பகுதியில் காரில் சென்றுகொண்டிருக்கும் மெட்ரோ ரயில் பணிக்காகப் பள்ளம் தோண்டியது தொடர்பான பிரச்சனையில் அவருக்கும் மெட்ரோ ரயில் உதவி மேலாளருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு இருக்கிறது. இந்த வாக்குவாதத்தின்போது அந்த அதிகாரியை ஆபாசமாகத் திட்டியதோடு பாடகர் வேல்முருகன் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பாகப் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
வழக்குப் பதிவு செய்த கையோடு பாடகர் வேல்முருகனையும் கைது செய்துள்ளனர். மெட்ரோ ரயில் உதவி மேலாளரைத் தாக்கியபோது பாடகர் வேல்முருகன் குடி போதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவர்மீது ஆபாசமாகப் பேசுதல், பொதுவெளியில் தாக்குதல் நடத்துதல் போன்ற பிரிவுகளின் கீழ் அவர்மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதேபோல் கடந்த மார்ச் மாதம் மதுபோதையில் விமான நிலையத்தில் வேல்முருகன் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.



