
‘ எஸ்.டி.ஆர். 48’ படத்தில் நடிக்க ஜான்வி கபூர் மற்றும் கியாரா அத்வானி ஆகியோரிடம் படக்குழு பேசி வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது..
சென்னை:எஸ்.டி.ஆர் என ரசிகர்களால் அழைக்கப்படும் சிம்பு சில காரணங்களால் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்தார். அதன்பின்னர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்தார். அந்தப் படம் மெகா ஹிட் ஆனது. அதனைத்தொடர்ந்து சிம்பு ‘பத்து தல’ படத்தில் நடித்தார்.
இந்நிலையில், ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்க உள்ளார். இப்படத்திற்கு தற்காலிகமாக ‘எஸ்.டி.ஆர். 48’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனமும் மகேந்திரனும் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.
இந்நிலையில், இப்படத்தில் நடிக்க உள்ள நடிகைகள்குறித்த தகவல் இணையத்தில் பரவி வருகிறது. அதன்படி இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கப் பிரபல பாலிவுட் நடிகைகள் ஜான்வி கபூர் மற்றும் கியாரா அத்வானி ஆகியோரிடம் படக்குழு பேசிவருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் தமிழ் சினிமாவில் இருவரும் அறிமுகமாக உள்ளனர்.
முன்னதாக, கீர்த்தி சுரேஷ், மிருணாள் தாகூர் மற்றும் தீபிகா படுகோனே ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிகஇருப்பதாகத் தகவல் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.


